டி.சி.எஸ் ஊழியரின் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்து அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கில், பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை ஹைகோர்ட். பிற ஊழியர்களும், கோர்ட் நோக்கி செல்ல இந்த உத்தரவு ஊக்கம் கொடுத்துள்ளது.
டி.சி.எஸ் நிறுவனம் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஐடி ஊழியர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை டி.சி.எஸ் அலுவலகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் ஊழியர், தனது நீக்கத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவர் டி.சி.எஸ் நிறுவனத்தில் அனாலைஸ்ட் என்ற பொறுப்பில் இருந்தவராகும். இவருக்கு சி பிரிவு தகுதியை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. 2011 மார்ச் மாதம் முதல் இப்பணியை அவர் வகித்துவந்த நிலையில், கடந்த மாதம், 22ம்தேதி, அவர் பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஜனவரி 21ம்தேதி பணிக்கான கடைசி நாள் என்று டி.சி.எஸ் நிர்வாகம் அவரிடம் தெரிவித்தது.
ஐடி நிறுவனத்தில் பணியாற்றியபோதிலும், இவரது பணி, தொழிற்சாலைகள் பிரச்சினை சட்டத்தின் பிரிவு 2 (s)ன் கீழ் வருகிறது. எனவே தனது பணி நீக்கத்தை எதிர்த்து அப்பெண் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஹைகோர்ட் நீதிபதி துரைசாமி, அப்பெண்ணின் பணி நீக்கத்திற்கு 4 வாரம் இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை முடிவை பிற ஐடி ஊழியர்களும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications