தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கு.. தடை கோரும் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற தினகரனின் வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-97ம் ஆண்டு சசிகலா, டிடிவி. தினகரன், பாஸ்கரன் ஆகியோர் அப்போதய ஜெஜெ டிவிக்காக அமெரிக்காவில் உள்ள ரின் சார்ட் லிமிடெட் நிறுவனத்திடமும், சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும் பணம் பரிவர்த்தனை செய்தனர்.
எந்த ஆவணமும் இல்லாமல் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் 3 பேர் மீதும் அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

குற்றச்சாட்டு பதிவு
இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினகரன் மனு
இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். மேலும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இடைக்கால தடை
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஒத்தி வைப்பு
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். தீர்ப்பு வெளியான பின்னரே தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படுமா அல்லது அவர் விடுவிக்கப்படுவாரா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications