தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ஸ்டிரைக்.. நீதிமன்றப் புறக்கணிப்பு... ரயில்மறியல்!
சென்னை: வழக்கறிஞர் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடங்கியுள்ள காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் முழுவதும் வக்கீல்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற பரிந்துரையின்படி, வக்கீல்கள் சட்டப்பிரிவு 34(1)ன் கீழ் விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை வக்கீல்கள் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திங்கட்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் அவசர பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் செவ்வாய் முதல் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது எனவும், புதன்கிழமை ரயில் மறியல் போராட்டமும், வரும் 1ம் தேதி புதிய சட்ட விதி நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமையன்று காலை வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பை தொடங்கினர். அரசு வக்கீல்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதையடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நீடித்தது.
அடுத்தகட்ட போராட்டமாக கடற்கரை ரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன் தலைமையில், வழக்கறிஞர் முரளி, சீனிவாசராவ் உள்ளிட்ட ஏராளமானோர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், கடற்கரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் மறியல் போராட்டத்தையடுத்து, கடற்கரை ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீர்மானித்தது போல வக்கீல்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். அப்போது, வக்கீல்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.