மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது : அரசு போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ளேன். மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் ஆட்களை நியமிக்க உள்ளதாக மேலாண் இயக்குநராக இருந்த பாபு என்னிடம் கூறினார்.

இவரது பேச்சை நம்பி, எனக்கு தெரிந்த பலரிடமிருந்து ரூ.60 லட்சம் வரை பணத்தை மேலாண் இயக்குநரிடம் வாங்கி கொடுத்தேன். இவர் ஓய்வு பெற்றதும், புதிய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் பணியை முடித்து தருவார் என்றார்.
ஆனால் உறுதி அளித்தபடி யாருக்கும் வேலை தரவில்லை. மாறாக சிலருக்கு மட்டும் கடந்தாண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றினர். மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, காரைக்குடி மண்டல முன்னாள் மேலாண் இயக்குநர் பாபு, தற்போதைய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் உள்ளிட்டோர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விமலா, சம்மந்தப்பட்டவர்கள் மீதான புகாருக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் போதிய முகாந்திரம் இல்லை என கூறி, வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால் மனுதாரர் சுப்பையா என்பவரது வங்கிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதற்கு ஆவணங்கள் இருப்பதால், போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி விமலா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications