உயிர் வாழ்வது அடிப்படை உரிமை.. உறவினர்களை கூட பார்க்கவிடவில்லையே ஏன்? ஜெ. மரணம் பற்றி நீதிபதி பொளேர்
உயிர் வாழ்வது அடிப்படை உரிமை என்று, ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் சென்னை ஹைகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரித்து உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதிமுகவை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வின் முன்னர் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது மத்திய, மாநில தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களை பார்த்து, நீதிபதி வைத்தியநாதன் சில பரபரப்பு கேள்விகளை முன்வைத்தார்.

நீதிபதி வைத்தியநாதன் வீசிய சாட்டையடி கேள்விகள் இவைதான்:
- ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அனைவருக்குமே, அது தொடர்பாக கேள்வி கேட்க உரிமை உள்ளது.
- ஜெயலலிதா நடப்பதாக ஒருநாள் கூறப்பட்டது, மற்றொருநாள் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று இறந்துவிட்டதாக கூறப்படுவதன் பின்னணி என்ன?
- முதல்வர் குணமடைந்து வருவதாகவும், சாப்பிடுவதாகவும், கையெழுத்திடுவதாகவும், ஆலோசனை கூட்டங்களைகூட நடத்துவதாகவும் செய்தித்தாள்களில் செய்தி வெளியே வந்தது. ஆனால், திடீரென்று அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டது.
- மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அது தொடர்பாக, வீடியோ வெளியிடப்பட்டது. உயிர் வாழ்வது என்பது அடிப்படை உரிமை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
- மருத்துவமனையில் ஜெயலலிதாவை சென்று பார்க்க உறவினர்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசு தரப்பில் மருத்துவமனைக்கு விசிட் செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக வெளிப்படையாக எதையுமே தெரிவிக்கவில்லை. உங்களுக்கு (மத்திய அரசு) எல்லாம் தெரிந்திருந்தும், கோர்ட்டிடம் எதையுமே தெரிவிக்காமல் மவுனமாக இருந்து விட்டீர்கள்.
- ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது யாரும் எதுவுமே தெரிவிக்காததால், சந்தேகம் எழுந்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடக்கூடும். இவ்வாறு நீதிபதி காரசாரமாக தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை கொண்டுவர கோரும் மனுதாரரின் கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு, பிரதமரின் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications