குவிந்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்களால் திணறிய சென்னை உயர்நீதிமன்றம்!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை காரணமாக சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
சென்னை : முதல்வர் பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையால் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதாடினார்.
நீதிமன்ற அறை எண் 23ல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையை பார்ப்பதற்காக வழக்கறிஞர்களும், செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த செய்தி ஊடகங்களின் பத்திரிக்கையாளர்களும் கோர்ட் வளாகத்தில் குவிந்தனர்.
இதே போன்று திமுக சார்பில் முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எனவே நீதிமன்றத்தின் கையில் இருக்கும் இறுதி முடிவை அறிந்து கொள்வதற்காக பாரிமுனைப் பகுதியில் கட்சியினர் குவிந்தனர்.
எனினும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு இருப்பதால், அடையாள அட்டை உள்ள வழக்கறிஞர்கள், அன்றாடம் நீதிமன்றம் வந்து செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன. மேலும் வழக்கிற்கு தொடர்புடையவர்கள் சிலரும் அனுமதிக்கப்பட்டனர். உரிய அனுமதிபெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்டாலும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் வாதாடியமதால் அதிக எண்ணிக்கையிலானோரால் கோர்ட் வளாகம் நிரம்பி வழிந்தது.
இதே போன்று நீதிமன்றத்திற்கு வெளியில் தமிழகம், மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்களும் திமுக, அதிமுக தொண்டர்களும் குவிந்திருந்தனர். இதனிடையே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பாரிமுனைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.