மதுரை மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் பெண்ணை கத்தியால் குத்த முயன்று கைதான மனநல நோயாளியாம்
மதுரை: மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் கடந்த ஆண்டு பெண் ஒருவரை கத்தியால் குத்த முயன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் மீனா(17) மற்றும் அங்காள ஈஸ்வரி(18). மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த 12ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றனர். வழியில் மர்ம நபர் ஒருவர் அவர்கள் மீது ஆசிடை வீசிவிட்டு ஓடிவிட்டார்.
இதில் காயம் அடைந்த மாணவிகள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுதாகர் என்பவர் தனது மகன் சங்கர நாராயணன் தான் மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி அவரை போலீசில் ஒப்படைத்துள்ளார். தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான சான்றிதழை சுதாகர் போலீசாரிடம் அளித்துள்ளார். போலீசார் சங்கர நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து சுதாகர் கூறுகையில்,
என் மகனை கடந்த 4 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அவராக வீட்டுக்கு வந்தார். அவரின் கையில் காயம் இருந்ததை பார்த்து இது எப்படி ஏற்பட்டது என்று கேட்டோம். அதற்கு அவர் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசினேன் அப்போது என் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் நேராக வழக்கறிஞரை சந்தித்து அவர் உதவியுடன் என் மகனை போலீசாரிடம் ஒப்படைத்தேன் என்றார்.
சங்கர நாராயணன் கடந்த ஆண்டு ஒரு பெண்ணை கத்தியால் குத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவரை எச்சரித்து அவரது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications