காளைக்கு 2க்கு மேல்... வீரர்களுக்கு 18க்கு மேல் வயது வரம்பு- மதுரை கலெக்டர் உத்தரவு
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுகளுக்கு 2 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டியது அவசியம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வாடிவாசல், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவற்றிற்கு வர்ணம் பூசும் பணிகளும், பந்தல் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை ஒட்டி அங்கும் வேகமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள வாடிவாசல் பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் 15 ஆம்தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும்,17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு 8 மணிக்கு துவங்கி 2 மணிக்கு முடியும் என்றும், இரண்டரை வயது பூர்த்தியான காளைகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கபடும் என்றும் கூறினார். மேலும் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.