கொடைக்கானலில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு... நடிகர் மாதவன் மீது மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு
மதுரை: கொடைக்கானலில் நடிகர் மாதவனுக்கு சொந்தமான நிலம் வழியாக செல்லும் வாய்க்கால் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பழநி பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் என்.கணேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பகுதியில் பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை நடிகர் ஆர்.மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளார்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தபோது, மின்வாரிய செயற் பொறியாளர் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். ராஜவாய்க்கால் பயன்பாடு இல்லாமல் இருப்பதாக ஆட்சியரிடம் செயற்பொறியாளர் அறிக்கை அளித்தார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடர்ந்து புகார் அளித்ததால் நடிகர் மாதவன் ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக நெய்க்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றவும், மின் கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் வாதிட்டார்.
விசாரணைக்குப்பின் இந்த மனுவுக்கு பதிலளிக்க திண்டுக்கல் ஆட்சியர், மின்வாரிய செயற் பொறியாளர், பழநி வட்டாட்சியர் மற்றும் நடிகர் ஆர்.மாதவன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை ஜூலை 11- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications