மதுரை ஆதீனம் என நித்தியானந்தா தன்னை அறிவித்துகொண்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்து கொண்டதற்கு நித்தியானந்தாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது ஆதினமாக தன்னை அறிவித்துகொண்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
மதுரை ஆதீன மடத்திற்குள் செல்வதற்கு நித்தியானந்தாவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஜெகதலப்பிராதபன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழைய இடைக்கால தடை விதித்து இருந்தனர்.

இருதரப்பு வாதங்களும் முடிந்து இருந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. நித்தியானந்தா தன்னை 293வது ஆதீனமாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளார். 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது எப்படி ஒருவர் தன்னை தானே ஆதீனம் என்று அறிவித்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பிரமாணப்பத்திரத்தில் இதுபோன்ற தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரிய குற்றம். எனவே, நித்தியானந்தா தரப்பு உடனடியாக அந்த பிரமாணப்பத்திரத்தை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று நீதிபதி மகாதேவன் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications