4 ஆண்டுகளாக விடலை, இப்பயாச்சும் பேச விடுங்க- மதுரை மேயரை கையெடுத்துக் கும்பிட்ட திமுக கவுன்சிலர்கள்
மதுரை: கடந்த 4 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து எங்களை பேசவிடவில்லை, இனியாவது பேச விடுங்கள் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் மேயரிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. எனினும், அனுமதி இல்லாமல் பேசிய அவர்களை சபையில் இருந்து வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கதிரவன், துணை மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன் செல்லப்பா, ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் வாசித்தார். அதன் தொடர்ச்சியாக தேவர் சிலையில் மாலை அணிவித்த ஸ்டாலின், தவறான தகவல்களை பேசியது கண்டிக்கத்தக்கது என்று கூறி கருணாநிதி, ஸ்டாலின் குறித்து சில வார்த்தைகளை மேயர் கூறினார்.

திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு:
இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எம்.எல்.ராஜ், மாணிக்கம் உள்பட அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் "சபையில் தவறாக பேச வேண்டாம், இதற்கு பதிலளிக்க எங்களை உடனே பேச அனுமதிக்க வேண்டும்" என்றனர்.
அமைதியாக இருங்கள்:
அதற்கு மேயர், ‘‘பேசுவதற்கு வாய்ப்பு தரும் வரை அமைதியாக இருங்கள்'' என்றார். ஆனால் இதனை தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்று கொள்ள வில்லை. தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு போட்டியாக அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து நின்று முதல்வர் ஜெயலலிதா வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
மக்கள் பிரச்சினைகளுக்கு விளக்கம்:
அப்போது கவுன்சிலர் மாணிக்கம், கண்ணன் உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள் மேயரிடம் கையெடுத்து கும்பிட்டு, ‘‘இது வரை நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரு நாள் கூட தி.மு.க. கவுன்சிலர்களை பேச விட வில்லை. மக்கள் பிரச்சினைகளை சொல்லத் தான் இங்கு வருகிறோம். ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றி விடுகிறீர்கள். அதே போல் தி.மு.க. கவுன்சிலர் வார்டுகளில் பாராபட்சமாக எந்த அடிப்படை பணிகளையும் செய்வதில்லை. இனியாவது சபையில் எங்களை பேச விடுங்கள்'' என்றனர்.
மேயருக்கு எதிராக கோஷம்:
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கவுன்சிலர்கள், தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும், மேயருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். உடனே மேயர், ‘‘அனுமதியில்லாமல் சபையில் பேசிக் கொண்டு இருக்கும் தி.மு.க. கவுன்சிலர்களை சபையில் இருந்து வெளியேற்றுங்கள்'' என்று உத்தரவிட்டார்.
கவுன்சிலர்கள் வெளியேற்றம்:
இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர். அதன்பிறகு பேசிய மேயர், ‘‘தி.மு.க. வார்டில் எந்த பணியும் நடக்க வில்லை என்று சொல்வது அபாண்டமான பொய். உதாரணத்திற்கு கண்ணன் வார்டில் மட்டும் ரூபாய் 2 கோடிக்கு பணிகள் நடந்துள்ளன. அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.
அவர் பங்கு எங்குள்ளது?:
நாங்கள் எப்போதும் பாராபட்சம் பார்த்து பணிகளை செய்வதில்லை. அதே போல் தேவர் சிலை விவகாரத்தில், கடந்த 1974 ஆம் ஆண்டு தேவர் சிலையை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி திறந்து வைத்தார். அந்த சிலையை மூக்கையா தேவர் தான் நிறுவினார். அதில் கருணாநிதியின் பங்கு எங்கிருந்து வந்தது. அதே போல் அங்கிருந்த கல்வெட்டை மறைக்க வில்லை'' என்றார்.
பேசவே விடவில்லை:
இதற்கிடையே வெளியேற்றப்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள், "கடந்த நான்கு ஆண்டுகளாக சபையில் எங்களை பேச விட வில்லை. இந்த மாமன்றம் மக்களை பிரச்சினைகளை பேசுவதை தவிர்த்து தனி நபர் துதிபாடும் இடமாக மாறிவிட்டது. எங்களை பேச விடுங்கள் என்று கெஞ்சியும் கேட்டுக் கொண்டோம். ஆனால் இந்த முறையும் சபையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள்.
கல்வெட்டு வைப்பதே வேலை:
மராமத்து பணி பார்ப்பதற்கெல்லாம் எல்லாம் கல்வெட்டு வைக்கும் நடைமுறை உலகில் எங்கும் கிடையாது. ஆனால் தேவர் சிலையில் சிறிய பணியினை செய்து விட்டு ஜெயலலிதா பெயரில் கல்வெட்டு வைத்து இருக்கிறார்கள். இனி மருத்துவமனைக்கு சுண்ணாம்பு அடித்து விட்டு, அதற்கும் பெயரை மாற்றி கல்வெட்டு வைத்து விடுவார்கள்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications