ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: ஐ.பெரியசாமி மகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
மதுரை: தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சின்னசொக்கிக்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது, கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா, கணேசன், பூங்கொடி, சங்கர், சித்திக், மாரிமுத்து உள்பட பலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திரா, கணேசன் உள்ளிட்ட 6 பேர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்திரா உள்ளிட்ட 2 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர்கள் 2 பேரும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும், அதன்பின்பு மதுரையில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
பூங்கொடி, சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications