மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்... இடி மின்னலுடன்.. மகா மகிழ்ச்சியில் மாமதுரை!
மதுரை: மதுரை மாவட்டத்தில் இடியும் மின்னலுமாய் கொட்டிய கனமழையால் குளுமை பரவியுள்ளது. சித்திரை திருவிழா தொடங்க உள்ள நேரத்தில் பெய்து வரும் மழையால் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மார்ச் மாதம் முதலே கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்த நிலையில், கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் மழை கொட்டிய நிலையில் இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் தூறலாக தொடங்கி இடியும் மின்னலுமாய் கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல மதுரையின் புறநகர் பகுதிகளிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளிலும் மழை பெய்து குளுமை பரவியது. இதனால் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும்
இதனிடையே தமிழகம், புதுவையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமையும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி பெரியகுளத்தில் 50 மி.மீ. மழையும் வால்பாறையில் 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது. குந்தா பாலம் (30 மி.மீ.), சின்னக்கல்லாறு, ஆண்டிப்பட்டி, சூளகிரி (20 மி.மீ.), ராஜாபாளையம் (10 மி.மீ.) ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

பயிர்கள் சேதம்
இதனிடையே தமிழகத்தில் பெய்துவரும் கோடை மழையால் தென் பகுதியில் 2 கோடிக்கு ரூபாய் மேல் பயிர்கள் நாசமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனியில் அதிகபட்சமாக சுமார் 8 மணி வரை மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல லட்சம் சேதம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியான ஆண்டியமேடு மற்றும் பேட்டை, ரிஷபம் ஆகிய பகுதிகளில் சுமார் 31 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வேரோடு சாய்ந்து சேதமானது. சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications