மதுரை, தேனியில மழை கொட்டுதேப்பா... சென்னையில மழைய காணோமேப்பா!!
சென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் ஜில் கிளைமேட்டுக்கு மாறியிருந்தாலும் மழை வந்தபாடில்லை... லேசான தூறலுடன் நின்று விடுகிறது. அதேநேரத்தில் மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 273.3 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான மழை அளவை விட இந்த ஆண்டு இதுவரை 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நிரம்பிய அணை
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியை யொட்டி உள்ள கடம்பூர் வனப்பகுதியில் விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. கோபி அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான இப்பகுதியில் பலத்த மழை பெய்ததையொட்டி அணை ஒரே நாளில் நிரம்பியுள்ளது. குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிந்து தண்ணீர் வெளியேறி செல்வதால் கரையோர கிராம மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மழை நீடிக்கும்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், பருவமழை முடியும் தருவாயில் இருந்தாலும் அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
மழை அளவு
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் 12 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ. மழை செவ்வாய்கிழமை இரவு பெய்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை
வட கிழக்கு பருவ மழை தொடங்கும் தேதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கவில்லை என்றும் ரமணன் கூறியுள்ளார்.
சென்னையில் மேகமூட்டம்
சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தைப் போல வெயில் கொளுத்திய நிலையில் கடந்த இரு தினங்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சின்னச் சின்ன சாரலுடன் நின்று விடுவதால் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சென்னைவாசிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.