கடலாக மாறிய மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பி கடலென காட்சியளிக்கிறது.
ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையை கடந்த போது கொட்டிய கனமழையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
பல ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 358 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 294 ஏரிகள் முக்கால் பங்குக் கொள்ளளவை எட்டியுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப் பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பியதால் மறுகால் பாய்ந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாரத்தில் மொத்தமுள்ள 108 ஏரிகளில் 12 ஏரிகள் மட்டுமே முழுவதும் நிரம்பியுள்ளன. மேலும், 50 ஏரிகள் 90 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. பெரிய ஏரிகளில் ஒன்றான தையூர் ஏரி முழுவதும் நிரம்பியதால் மறுகால் வழியாக உபரிநீர் வெள்ளமாகப் பாய்ந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு வரும் மழைநீர் உபரிநீராக கலிங்கல் மூலம் கிளியாற்றில் வெளியேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர், கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications