50 நாள்களில் 2-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மதுராந்தகம் ஏரி
கடந்த 50 நாள்களில் 2-ஆவது முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் கிளியாற்று வழியாக மதுராந்தகம் ஏரிக்கு 9,800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடியைத் தாண்டியுள்ளது. இதனால் 8,500 கனஅடி நீர் மதகுகள் வழியே திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த 50 நாள்களில் மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவை இரண்டாவது முறையாக எட்டியது. தற்போது மேலும் நீர் வரத்து அதிகரித்தால் கத்திரிச்சேரி, முள்ளி, வளர்பிறை, விழுது மங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.