இரட்டை மின்கம்பத்தை ‘இரட்டை இலை’ போல பயன்படுத்தவில்லை.. தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் பதில் மனு
இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போன்று பயன்படுத்தவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் சார்பில் மனோஜ்பாண்டியன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக சின்னத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக புரட்சிதலைவி அம்மா கட்சியின் மதுசூதனன், அதிமுக அம்மா கட்சியின் தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் மனுவை மதுசூதனன் சார்பில் இன்று சென்னையில் தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இரட்டை இலைக்கு தடை
இந்நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகள், தனித்தனி பெயரில் போட்டியிடுவதால், அவர்கள் அதிமுகவின் கட்சி பெயரையோ இரட்டை இலை சின்னத்தையோ பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இருப்பினும் விதிகளை மீறி ஒரு சில பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார் வந்தது.

சின்னத்தை தவறாக..
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் சமூக வலைத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு தினகரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனும் அதிமுக பெயரை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

மீண்டும் நோட்டீஸ்
இதையடுத்து, இரட்டை இலை சின்னம் மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியதாக தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இன்று மாலை 4 மணிக்குள் இருவரும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுசூதனன் பதில் மனு
இந்நிலையில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் சார்பில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னையில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை பிரச்சாரத்தில் தவறாக பயன்படுத்தவில்லை என்றும் இரட்டை மின்கம்பத்தை இரட்டை இலை போல் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications