வாக்கெடுப்பு ரத்து: உரிய ஆவணங்களை கொடுத்துள்ளோம்… ஆளுநர் முடிவெடுப்பார்.. மாஃபா உறுதி
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய உரிய ஆவணங்களை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாகவும் அப்போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்தார்.
ஆளுநரை சந்தித்து திரும்பிய பின்னர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நேற்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 5 நாட்களில் தொகுதிக்கு சென்று பொதுமக்களை எம்எல்ஏக்கள் சந்திக்க வேண்டும். சட்டசபையில் எந்த அளவிற்கு வன்முறை அரங்கேறியது. சுமார் 100 எம்எல்ஏக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதனால் நேற்று அறிவிக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
எனவே, இன்னொரு நாள் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் எங்களது கோரிக்கைகளை பரிவுடன் கேட்டார். சட்டசபையில் நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்த ஆவணங்களையும் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.
சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். அதற்கு சசிகலா தரப்பில் இருந்து 28ம் தேதிக்குள் பதில் வரவேண்டும். இல்லை என்றால் மார்ச் 1ம் தேதியே வேறு அறிவிப்பு வர வாய்ப்பிருக்கிறது என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications