"டிராபிக்" சிக்கல்.. 2வது முறையாக ஜெ.வுக்கு எதிரான மனுவை திருப்பி அனுப்பிய நீதிபதி
சென்னை: சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை 2வது முறையாக நீதிபதி ஒருவர் திருப்பிக் கொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் 7வது குற்றவியல் நீதிமன்றத்தில், டிராபிக் ராமசாமி முதல்வர் ஜெயலலிதா மீது ஒரு கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில்,

நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நெரிசல் ராமசாமி என்ற தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், என்னை பற்றி அவதூறான வார்த்தைகளுடன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்த கவிதையில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அனைத்தும், எனக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டு அனைத்தும் உள்நோக்கத்துடனும், ஆதாரமில்லாமலும் வெளியாகியுள்ளது. எனவே, நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் நிறுவனரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, நாளிதழின் வெளியீட்டாளர் எஸ்.எஸ்.பூங்குன்றன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை பிப்ரவரி 23ம் தேதி அவர் தாக்கல் செய்தார். அப்போது மனுவைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட் அல்லி, அதில் குறைபாடு இருப்பதாக கூறி திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருத்தம் செய்து மீண்டும் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று பரிசீலனை செய்த மாஜிஸ்திரேட் அல்லி, அதை மீண்டும் குறைபாடு உள்ளதாக கூறி ராமசாமியிடமே திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications