செல்வ வளம் அருளும் மகாசிவராத்திரி!
அன்னை மகாசக்திக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி என்றால் ஈசனுக்கு ஒருநாள் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி.
சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு.

ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க 'மகா சிவராத்திரி' ஆகும்.
சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் மாசிமாத தேய்பிறைக்காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

வற்றாத செல்வம் கிடைக்க
அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரி
சிவராத்திரி என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரி விரதமேயாகும். ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும்.
12 சிவராத்திரிகள்
ஆனால் ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாள் அதாவது தேய்பிறை பதின்னான்காம் நாள் சிவனுக்குரிய ராத்திரி ஆகும். இவ்வாறு மாதமொரு சிவராத்திரி என்ற வகையில் ஒரு வருடத்தில் பன்னிரு சிவராத்திரிகள் வருகின்றன. இவை மாத சிவராத்திரிகள் என அழைக்கப்படுகின்றன. அந்நாளில் திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருந்தால் அது மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சிவராத்திரியின் வகைகள்
உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும். சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி. சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.
தெய்வமே துணை
சிவராத்திரி என்பது வெறுமனே இரவுப் பொழுதைக் குறிப்பதல்ல. சிவம் என்றால் மங்களகரமானவர் என்று பொருள்படும். ராத்ரம் என்ற சொல் நன்மைகளைக் குறிக்கிறது. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பார்கள். உலக மக்கள் அனைவரும் துன்பத்தில் நலிந்திருக்கும் போது, எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்து சந்தோஷத்தை அருள்பவர் சிவபிரான். இதனாலேயே அவருக்குரிய இரவுக்கு சிவராத்திரி என்று பெயர் ஏற்பட்டது.
கண்விழிப்பது ஏன்?
மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

மகிமைகள் நிறைந்த ராத்திரி
மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி "மகா சிவராத்திரி'' எனப்படுகிறது. அன்றைய தினம் வருடம் முழுவதிலும் மிகவும் கடுமையான காரிருள் சூழ்ந்த இரவுப் பொழுது நிலவும், இந்த இரவு அளப்பரிய மகிமைகள் பல பொருந்தியது என சிவமகாத்மிய நூல்கள் கூறுகின்றன.
புராண கதைகள்
புராண ஐதீகங்கள் மகா சிவராத்திரி விரதத்தின் பின்னணியைப் பற்றிப் பல்வேறு புராணக் கதைகள் நிலவுகின்றன. பலரும் அறிந்த பிரபலமான கதை, பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குக் கர்வம் தலைக்கேறி, அறிவு மங்கி, அறியாமையால் அவர்கள் அமைதியிழந்த போது, ஈஸ்வரன் ஆதியந்தமற்ற ஜோதியாகத் தோன்றிய கதையாகும். மேலும் சில புராணக் கதைகளும் உள்ளன.
இருண்ட உலகம்
ஒருநாள் சங்கரருடைய கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாகத் தன் கரங்களால் மூடினாள். அதன் விளைவாக, புவியெங்கும் அஞ்ஞான இருள் பரவியது. சில கணங்கள் தான் சங்கரருடைய கண்கள் மூடப்பட்டது. இருந்த போதிலும் உலகெங்கும் ஆத்மாக்களுடைய அகக் கண்கள் மூடப்பட்டு அறியாமை என்ற இருள் கவிந்தது. அதனால் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கையின் சௌபாக்கியங்களை எல்லாம் இழந்தனர். துன்பங்கள் பெருகின. அதர்மம் நிறைந்து வழிந்தது. இன்னொரு புறம் மக்கள் இறைவனையும் அவனது கருணையையும் தேடித் திரிந்தனர்.

தவத்தில் மகிழ்ந்த சிவன்
இந்தக் காட்சியைக் காணச் சகிக்காத பார்வதி தேவி, தாயன்பு கொண்டாள். மனித ஆத்மாக்கள் மீண்டும் இக வாழ்வின் சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் சிவபெருமானை உள்ளன்புடன் பூஜித்தாள். எத்தனை பல இரவுகளும் பகல்களும் கழிந்த போதும் புவியெங்கும் இருள் சூழ்ந்திருந்ததால், அக்காலப் பகுதி ராத்திரி என்றே அழைக்கப்பட்டது. அன்னையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த எம்பெருமான், மீண்டும் சகலரும் பூலோகத்தில் துன்பமில்லாத சுகவாழ்வு பெற வரமளித்தார் என்பது புராண ஐதீகம்.
விஷம் உண்ட இறைவன்
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதற்கு அஞ்சி, மும்மூர்த்திகள் உட்படத் தேவ, தேவியர் அனைவரும் சிவபிரானிடம் தஞ்சமடைந்தனர். மனமிரங்கிய எம்பிரான் விஷத்தைத் தானே உட்கொண்டார். அவரது கழுத்திலே தங்கி விட்ட விஷம் மேலும் பரவாதிருப்பதற்காக தெய்வங்கள் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து இன்பகரமாக ஆடிப்பாடி எம் பெருமானை மகிழ்வித்தனர். விடிந்ததும் அனைவருக்கும் எல்லையில்லாத வரங்களை அளித்து இறைவன் ஆசிர்வதித்தார். இச்சம்பவத்தை நினைவுகூரும் முகமாக அன்றைய திதி அபிடேக அர்ச்சனைகளால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது என்பது இன்னொரு நம்பிக்கை.

சிவ ஆலயங்களில் வழிபாடு
பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஐந்து தலங்களிலும் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடக்கும். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகின்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவக் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
நான்கு ஜாம பூஜைகள்
மகா சிவராத்திரியன்று கோயில் நாள் முழுவதும் திறந்திருக்கும். அன்று நடராஜருக்கு தினமும் நடக்கும் ஆறுகால பூஜைகளுடன் இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜைக்கு முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
முதல்ஜாமபூஜை
மூன்று மணி நேரம் ஒரு ஜாமம் எனப்படுகிறது. முதல் ஜாமம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின்றது. மகா சிவராத்திரி அன்று முதலாம் ஜாமம் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் செய்து செம்பட்டாடை அணிவித்து பாலன்னம் நிவேதித்து சந்தனத் தூபமிட்டு விசேட பூஜையாக ஸ்நபனாபிஷேகம் செய்து சிவார்ச்சனையும் வழிபாடும் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில்
இரவு ஒன்பது மணிக்கு வரும் இரண்டாம் ஜாமப் பூஜையின் போது பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் செய்து மஞ்சள் பட்டாடை அணிவித்து பாயாசான்னம் படைத்து, அகிற் சந்தனக் கந்தத்துடன் நட்சத்திரத் தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில்
மூன்றாம் ஜாமப் பூஜையின் போது பலோதக அபிடேகம் செய்து வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து எள்ளோதன நைவேத்தியத்துடனும் கஸ்தூரி சேர்த்து சந்தனக் கந்தத்துடனும் கருங்குங்கிலியத் தூபமிட்டு ஐந்து முகத் தீபõராதனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில்
நான்காம் ஜாமம் கந்தோதக அபிடேகத்தின் பின் நீலப் பட்டுடுத்தி சுத்தான்னம் படைத்து புனுகு சேர்ந்த சந்தனக் கந்தத்துடன் லவங்கத் தூபமிட்டு வில்வ தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
தீரா நோய் தீரும்
மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என்பது முன்னோர் வாக்கு.












Click it and Unblock the Notifications