சசிகலாவை ஒதுக்கி வைத்ததாக எடப்பாடி கோஷ்டி நாடகம்.. ஜெயக்குமார் கை தேர்ந்த நடிகர்.. மைத்ரேயன் சுளீர்
சென்னை; இரு அணிகளும் இணைவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோஷ்டி நாடகம் ஆடிவருவதாகவும், இதில் அமைச்சர் ஜெயக்குமார் நல்ல கை தேர்ந்த நடிகர் என்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தண்ணீர் பந்தலை ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பி மைத்ரேயன் இன்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், யாருடன் கூட்டு வைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவெடுக்கப்படும்.
சவால்
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரியம் இருக்கிறதா? அதற்கான தேதியை அவர் அறிவிப்பாரா? நீதிமன்ற உத்தரவின்படி ஜுன் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நாடகம்
இரு அணிகள் சேருவதற்கு இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான். சசிகலா மற்றும் அவரது குடும்பம் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக அந்த அணியினர் நாடகம் ஆடுகிறார்கள்.
கை தேர்ந்த நடிகர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் கை தேர்ந்த நல்ல நடிகர். முதல்வர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் நேற்று கூட அந்த அணியில் உள்ளவர்கள் சசிகலாவை சந்தித்துள்ளனர்.
தவறான பாதை
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை எம்.எல்.ஏக்கள், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் நேரடியாக சென்று பார்த்திருக்கிறார்கள். எடப்பாடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் போய் சசிகலாவை பார்த்து வருகிறார் என்றால் இது யாரை ஏமாற்ற போடும் நாடகம்? பெங்களூருவை நோக்கி செல்வது தவறான பாதை.
அணிவகுப்பு
இந்த நாடகத்தை அதிமுக தொண்டர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 95 சதவீத தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளனர். மீதி உள்ளவர்கள் அனைவரும் ஓபிஎஸ் தலைமையை ஏற்று வர வேண்டும். காலம் இதற்கு பதில் சொல்லும் என்று மைத்ரேயன் கூறினார்.