இதயம் நிறைய அன்பால் நேசித்த முகுந்த்.. மனைவியின் உருக்கம்
சென்னை மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி தனது ஒரே மகளோடு வாழ்க்கையின் அடுத்து வரும் நாட்களுக்கு தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டு தயாராகி விட்டார். ஆனால் தன்னுடன் உயிரோடு உயிராக கலந்து போயிருந்த தனது கணவரின் இழப்பை அவரால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது, முடியவில்லை என்பது தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ள போஸ்ட் சாட்சியம் அளிக்கிறது.
மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால் பெருமிதத்துடன்தான் இருக்கிறார். நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் அகமகிழ்ந்துதான் போயிருக்கிறார்.
ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, ஒரு குழந்தைக்குத் தாயாக அவர் தனது கணவரின் மரணத்தால் மனதளவில் உடைந்து போயிருக்கிறார். தான் முகுந்த் மீது வைத்திருந்த காதலை, அன்பை, பாசத்தை, நேசத்தை மிக எளிதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ளார்.
அந்த உருக்கமான வரிகள்...
தன் இதயம் முழுக்க அன்பால் நிரப்பி நேசித்தார்
என் குழந்தைக்கு அன்பான தகப்பனாக வாழ்ந்தார்
ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்
தன் வேலையை நேசித்தவர்
தான் ஒரு ஹீரோ என்ற மமதை இல்லாதவர்
என் ஆத்மாவாக மாறிப் போனவர்
தாராள மனதுக்குச் சொந்தக்காரர்...
எல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் ...
தன் வாழ்க்கை முழுவதும் என்னை நேசித்தவர்
இன்று...நான் தனித்துக் காத்திருக்கிறேன்...
ஆனால்.. நான் அவரை ஒரு நாள் சந்திப்பேன்...
அன்று எப்போதும் எனக்குத் தரும் அந்த அன்புத் தழுவலை அப்போதும் அவர் கொடுப்பார்
மூச்சு விட முடியாமல் போனாலும்..
அந்த அன்புத் தழுவலிலிருந்து விடுபட மாட்டேன்...!