தேமுதிக கூடாரம் கலகலத்து போய்விட்டது - மதேமுதிக சந்திரகுமார் பேட்டி !
சென்னை: தேமுதிகவின் கூடாரம் கலகலத்து போய்விட்டது என்று மக்கள் தேமுதிக ஒருங்கிணை்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்
சட்டசபை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.ஹெச்.சேகர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தேமுதிகவை தொடங்கி திமுக கூட்டணியில் இடம்பெற்றனர்.
மக்கள் தேமுதிக 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இதையடுத்து மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மக்கள் தேமுதிக ஒருங்கிணைப்பாளர் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.ஹெச்.சேகர் ஆகியோர் திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார் கூறுகையில், மக்கள் தேமுதிகவை, திமுகவில் இணைக்கும் தீர்மான நகலை ஸ்டாலினிடம் வழங்கி உள்ளோம். இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை அறிவாலயத்தில் சந்திக்க உள்ளோம். அப்போது திமுகவுடன் இணையும் தேதி தெரிய வரும்.
அதன் பின்னர் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு தேமுதிக அதிர்ப்தியாளர்களிடம் பேசி திமுகவில் ஒட்டு மொத்தமாக இணைய உள்ளோம். தற்போது தேமுதிக கூடாரம் கலகலத்து போய்விட்டது. மேலும் தற்போது 14 மாவட்டச் செயலாளர்கள் பெயரில் எழுதப்பட்டிருக்கின்ற கடிதம் தேமுதிகவில் ஒரு சூறாவளி புயலைப் போல வீசிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திசை திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு விஜயகாந்த் ஆளாகிவிட்டார்.
தொண்டர்களை திசை திருப்பும் விதமாக தற்போது எங்கள் மீது டி.ஐி.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் துளி கூட உண்மை இல்லை. வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.