கிராமத்தில் புகுந்து பெண்ணை இழுத்துச் சென்ற ஆண் எஸ்.ஐ... வாட்ஸ் ஆப் வீடியோவால் பரபரப்பு
கரூர்: கரூர் அருகே திருமாநிலையூர் என்ற இடத்தில் ஒரு பெண்ணை ஆண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வாட்ஸ் ஆப் மூலம் வேகமாகப் பரவி வருகிறது.
கரூர் திருமாநிலையூரில் நேற்று முன் தினம் மாலை இரு வாலிபர்களுக்கிடையே பெரும் பிரச்சினை நேர அவர்கள் பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் தந்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் உடனடியாக வரவில்லை. தாமதமாக வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கோபால் ஒரு பெண்ணை கட்டாயமாக பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளார். நைட்டி அணிந்த நிலையில் அப்பெண்ணை அவர் வேகமாக இழுத்துச் செல்கிறார். உடன் வந்த பெண் போலீஸார் பின்னாடியே போகிறார்கள்.
இந்தக் காட்சியை அப்பகுதி மக்கள் படம் பிடித்து பத்திரிகை நிருபர்களுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் வாட்ஸ் ஆப்பிலும் போட்டுள்ளனர். இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.