வேலைக்கு போகச் சொன்ன மனைவி: 2 மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த கணவர்
வேலூர்: வேலூரில் மனைவி வேலைக்கு போகுமாறு கூறி கண்டித்ததால் ஒருவர் தனது 2 மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள சென்றாயன்கோட்டையைச் சேர்ந்தவர் தண்டபாணி(30). அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தண்டபாணி டைல்ஸ் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே அவருக்கு வருமானம் குறைந்தது. பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துவிட்டார்.
குடும்பத்தை நடத்த சரியான வருமானம் இல்லாமல் போனது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டபாணி கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வேலைக்குப் போனால் என்ன என்று அவரது மனைவி கேட்டுள்ளார். உடனே தண்டபானி தனது மகன்கள் ரித்திக்(4), சேகர்(2) ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பட்டிக்கு சென்றார்.
வளத்தூர் கீழ்ப்பட்டிக்கு இடையிலான ரயில் பாதையில் குழந்தைகளுடன் காத்திருந்தார். சரக்கு ரயில் ஒன்று வருவதைப் பார்த்த அவர் மகன்களை ரயில் முன் வீசிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.