தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுர வாசலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்! யார் அந்த ஆனந்த பாலன்?
தென்காசி: தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலின் கோபுரம் முன்புள்ள தரைப்பகுதியில் இன்று திடீரென்று மர்மநபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுது்து அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசியின் மையப்பகுதியில் உயரமான கோபுரத்துடன் காசி விஸ்நாதர் கோவில் அமைந்துள்ளது. தென்காசியை ஆண்ட மன்னன் பராக்கிரம பாண்டியன் காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு வந்தார்.

அதன்பிறகு வடக்கே காசி போன்று தெற்கு பகுதியில் உள்ள மக்களுக்காக தென்காசியில் பராக்கிரம பாண்டியன் மன்னரால் காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார மக்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று காலை 8 மணியளவில் கோவில் கோபுரத்தின் முன்பு பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். மார்கழி மாதம் என்பதால் கோவில் முன்பு பக்தர்கள் கோலமிட்டு இருந்தனர். அப்போது திடீரென்று ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் இருந்து 10 லிட்டர் பெட்ரோலை கோபுரத்தின் முன்புறத்தில் ஊற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி உடனடியாக பெட்ரோல் மீது தீ வைத்துள்ளார். இதனால் கோவிலின் நுழைவு வாயில் அருகே தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பக்தர்கள் அலறி ஓடினர். அருகே இருந்த கடைக்காரர்கள் மற்றும் போலீசார் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். அதோடு தீவைத்த நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஆனந்த் பாலன் என்பதும், அவரது வயது 31 என்பதும் தெரியவந்தது.
அதோடு கடையம் அருகே உள்ள கேளப்பிள்ளையாவூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தென்காசி துணை சூப்பிரண்டு தமிழ் இனியன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோபுரங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. கோவிலில் புதிதாக கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று கோவில் முன்பு மர்மநபர் தீவைத்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications