சென்னையில் காதலியை பிளேடால் அறுத்து கொல்ல முயன்ற காதலன் கைது
பல்லாவரத்தில் இளம் பெண் ஒருவரின் தலையை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: பல்லாவரத்தில் இளம் பெண்ணின் கழுத்தையும், தலையையும் பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், பல்லாவரத்தில் விடுதியில் தங்கி பணி செய்து வந்தார். பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சத்யபிரகாஷ் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. சத்யபிரகாஷ் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

தனது காதலி பிற ஆண்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிட்டார் சத்யபிரகாஷ். ஆனால் அந்த பெண்ணோ, சகஜமாக அனைவரிடமும் பேசி வந்துள்ளார். இது சத்யபிரகாசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் மாறி மாறி சண்டை வரவே ஒரு கட்டத்தில் மோதலும் அதிகரித்தது. சில தினங்கள் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
சமாதானம் பேசுவது போல பேசி காதலியை பல்லாவரம் பூங்காவிற்கு வரவழைத்தார் சத்யபிரகாஷ். நம்பி சென்ற இளம்பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீண்டும் கோபமாக பேசினார் சத்யபிரகாஷ். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, தனது கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து காதலியின் முகம், கழுத்து பகுதிகளில் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அந்த பெண்.
அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டதோடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சத்யபிரகாஷை கைது செய்ய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருதலைக்காதல் கொலைகளும், காதல் முறிவினால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications