புதுகை கலெக்டர் அலுவலகத்தில் புஸ்ஸ்ஸ்ஸ்.... பாம்புடன் வந்து மனு கொடுத்து “பீதி” கிளப்பிய குடும்பம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பாம்புவுடன் வந்து மனு கொடுத்து ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த அலெக்சாண்டர். இவர் குடும்பத்துடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கையில் ஒரு பாம்பு வைத்திருந்தார்.
அவர் கொடுத்த மனுவில், "எங்கள் குடியிருப்புக்கு மத்தியில் மர அறுவை மில் உள்ளது. இதனால், இங்கு ஏராளமான பாம்புகள் உலா வருவதால் மக்கள் எப்போதும் அச்சத்துடன் உள்ளனர். இரவு எனது வீட்டில் நாகப் பாம்பு புகுந்தது. இதை பார்த்த மனைவி, குழந்தைகள் அலறி அடித்து தப்பினர்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாம்பை அடித்து கொன்றனர். 10க்கும் மேற்பட்ட பாம்புகள் வீட்டுக்குள் புகுந்துள்ளன. வீட்டிலிருந்த 4 ஆடு மற்றும் 2 பசு மாடுகளும் பாம்பு கடித்து இறந்துள்ளன.
குடும்பத்தினர் வீட்டில் தூங்கவே அஞ்சுகின்றனர். குடியிருப்பு மத்தியில் உள்ள மரமில்லை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.