ஓ காதல் கண்மணி எஃபெக்ட்: கோவையில் வாலிபர், 7 வயது குழந்தையின் தாய் தற்கொலை!
கோவை: ஓ காதல் கண்மணி படம் பார்க்க காதலி வரவில்லை என்பதற்காக வாலிபர் ஒருவரும், படத்துக்கு கணவர் கூட்டிச் செல்லவில்லை என்று பெண்மணி ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் கோவை நகரில் நடந்துள்ளது.
மணிரத்னம் இயக்கி கடந்த வெள்ளிக்கிழமை திரைகண்ட படம், ஓ காதல் கண்மணி. ரொமான்ட்டிக் திரைப்படம் என்பதால் இளைஞர்களும், இளம் பெண்களும், அந்த படத்தை காண ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவை, ஹோப்ஸ் கல்லூரி அருகேயுள்ள பிஆர் புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (29) சேல்ஸ் எக்சிகியூட்டிவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, ஜவுளி கடையில் வேலை பார்க்கும் தனது காதலியை ஓ கண்மணி படம் பார்க்க கூப்பிட்டுள்ளார். ஆனால், அந்த பெண், படம் பார்க்க வர மறுத்துவிட்டார். இதனால் 'மனமுடைந்த' ஜெய்சங்கர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிவிட்டார். தகவலறிந்த அவரது காதலி, ஜெய்சங்கர் வீட்டுக்கு வந்து, அங்கிருந்து செல்ல மறுத்து அழுது கொண்டே உள்ளாராம்.

மற்றொரு சம்பவம் நவஇந்தியா பகுதியில் நடந்துள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த பழனிச்சாமியின் மனைவி பத்மபிரியா (31) பிக்பஜாரில் ஷாப்பிங் செய்துவிட்டு, அப்படியே ஓ காதல் கண்மணி படத்துக்கு போக தனது கணவரை அழைத்துள்ளார். பழனிச்சாமி, ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை சேல்ஸ் மேனேஜராக பணியாற்றுபவர். அலைச்சல் காரணமாக, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி படத்துக்கு வர மறுத்துள்ளார்.
இதனால் 'மனமுடைந்த' பத்மபிரியா, விஷம் குடித்துள்ளார். இதையறிந்து பழனிச்சாமி, தனது மனைவியை மருத்துவமனை தூக்கிச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பத்மபிரியா 7 வயது குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மனநல டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது "தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்டங்களில் மனரீதியாக ஹெல்த் குறைந்து வருகிறது. இதை சரி செய்ய வேண்டும். மேற்கண்ட இரு சம்பவங்களிலும், படம் மட்டுமே தற்கொலைக்கு காரணமாக இருக்க முடியாது. சில நாட்களாகவோ, பல நாட்களாகவோ ஜோடிகள் நடுவே இருந்த பிரச்சினை, படப் பிரச்சினை தொடர்பாக வெடித்திருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications