30 ரவுண்டு... 18 தோட்டாக்கள் புலி வேட்டை பரபரப்பு: நிம்மதியில் மக்கள்
உதகமண்டலம்: உதகை மற்றும் சுற்றுவட்டார 50 கிராமங்களை நிம்மதியிழக்க செய்த கொடூர மனித வேட்டைப் புலி புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மனிதர்களை தாக்கி கொன்ற புலியை பிடிக்க கடந்த 8ம் தேதி முதல் வனத்துறையினர், அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட்டனர்.
வனத்துறை முதன்மை வனப்பாது காவலர் லட்சுமி நாராயண், கோவை வனப்பாது காவலர் வி.டி.கந்தசாமி உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர்கள் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை, பத்ரசாமி தலைமையில் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்களுடன் தமிழக சிறப்பு அதிரடிப்படை சத்தியமங்கலம் முகாமிலிருந்து ஆய்வாளர் ஜெய்சிங் தலைமையில் 12 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டு புலியை சுட்டுக் கொன்றுள்ளனர்.
மன உளைச்சல்
கொடூர புலி கொல்லப்பட்ட திக் திக் தருணங்கள் பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
தேயிலை தோட்டத்தில் புலி
புலி கடைசியாக தஞ்சமடைந்த குந்தசப்பை நிலப் பரப்பு மிகவும் கடினமானது. இப் பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளது. மேலும் வனப் பகுதியிலும் முட்புதர்கள் சூழ்ந்திருந்தன. இதனால் பதுங்கியுள்ள புலியை பிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
கண்ணில் சிக்கிய புலி
புலி அகப்படாததால் ஒரு கட்டத்தில் அனைவருமே மன உளைச்சலுக்கு ஆளானோம். இந் நிலையில், புதன்கிழமை பசுவை புலி தாக்கிய தருணம்தான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து புலியை சுற்றி வளைத்தோம்.
தாக்க முயன்ற புலி
புலியை கண்டறிய முதுமலை வன ஊழியர் பொம்மன் பெரும் உதவியாக இருந்தார். புலி எங்களைத் தாக்க முற்பட்டதால், தற்காப்புக்காக சுட நேர்ந்தது. முதலில் குண்டு காயத்துடன் புலி தப்பியது. ஆக்ரோஷமான புலி எங்களை சுற்றி வந்தபோது மீண்டும் அதனைச் சுட நேர்த்தது. பல குண்டுகள் பாய்ந்ததும் புலி உயிருக்குப் போராடி தேயிலை தோட்டத்தில் விழுந்தது என்றார்.
30 ரவுண்டுகள்
புலியை சுட்டபோது அது குண்டு காயத்துடன் அதிரடிப்படையினர், வனத்துறையினரை தாக்க முற்பட்டுள்ளது. இதனால், அதை சுட்டுக் கொல்ல நேர்ந்துள்ளது. சுமார் 30 ரவுண்டுகள் சுடப்பட்டதாகவும், இதில் 16 முதல் 18 குண்டுகள் புலியின் உடலில் துளைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. ஆனால், எத்தனை குண்டுகள் அதன் உடலில் பாய்ந்துள்ளன என்பது பிரேத விசாரணை அறிக்கை கிடைத்த பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறைக்கு அனுபவம்
1972ம் ஆண்டு வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதால் வேட்டை குறைந்து வன விலங்குகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தை ஒட்டி குடியிருப்புகள் உள்ளதால் மனித-விலங்கு மோதல் அதிகரிக்கவே செய்யும். இந்த தேடுதல் பணி வனத்துறைக்கு சிறந்த அனுப வமாக அமைந்துள்ளது என்று வடக்கு வனக்கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை கூறியுள்ளார்.
உடல் எரிப்பு
இதனைத் தொடர்ந்து வனத்துறை, காவல்துறை, இரு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோர் முன்னிலையில் புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு, ஆய்விற்காக புலியின் உடல் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின் அங்கேயே புலியின் உடல் எரிக்கப்பட்டது. புலியை பார்க்க ஊட்டியில் உள்ள படகு இல்லம் அருகில் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிம்மதியில் மக்கள்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சோலாடா, தொட்டபெட்டா மற்றும் குந்தசப்பை ஆகிய பகுதியில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் உட்பட 3 பேரை புலி தாக்கி கொன்றது. மனிதர்களை தாக்கி கொன்ற புலியை பிடிக்க கடந்த 8ம் தேதி முதல் வனத்துறையினர், அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட்டனர். மனிதர்களைக் கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.