”பிளைட் டாய்லெட்ல சீட் போடுங்க” – வித் அவுட்டில் விமானத்தில் போக வந்த சென்னை இளைஞர்
சென்னை: ரயிலில் வித்-அவுட்டில் போவது போலவே விமானத்திலும் டிக்கெட் எடுக்காமல் போக முயன்ற வாலிபரால் சென்னை விமான நிலையமே கலகலப்பில் ஆழ்ந்தது.
விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பை மீறி, சுவர் ஏறி குதித்து நுழைந்த வாலிபரை சுற்றுவளைத்து அதிகாரிகள் பிடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகளின் விசாரணையில் ரயிலில் ஓசி பயணம் போன்று விமானத்திலும் பணம் இல்லாமல் செல்வதற்காக திருட்டுதனமாக விமானத்தில் ஏறவந்ததாக கூறியுள்ளார்.
5 அடுக்கு பாதுகாப்பு:
டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த "விமானக் கடத்தல்" தொடர்பான மிரட்டல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி மாலையில் இருந்து சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுவர் ஏறிக் குதித்து நுழைவு:
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள 9 ஆவது நுழைவாயில் வழியாக ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.
தீவிர சோதனை:
அந்த வழியாக விமானத்தில் உள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம். இதனால், அங்கு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளே செல்லும் பொருட்களையும், நபர்களையும் தீவிரமாக சோதனை நடத்தி அனுமதிப்பார்கள்.
உள்ளே நுழைந்த இளைஞர்:
ஆனால், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பையும் மீறி, அந்த வாலிபர் உள்ளே நுழைந்தார். அங்கு விமானங்கள் நிறுத்தும் இடத்தில் மறைந்து மறைந்து சென்று சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் நுழைய முயன்றார்.
சுற்றிவளைத்துப் பிடிப்பு:
இதை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
முன்னுக்குப் பின் பேச்சு:
அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது என தெரிந்தது.
கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை:
பின்னர் நேற்று மதியம் விமான நிலைய போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார், வாலிபரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, மனநிலை பாதித்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ் இருந்ததை கைப்பற்றினர்.
13 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்:
சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளிடம் சிக்குபவர்கள் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கூறி, விடுவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 13 பேர், சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.