சிவன் பெயரைச் சொல்லி தலையில் கல்லால் அடித்துக் கொண்ட கொத்தனார்!
புதுக்கோட்டை: கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே கொத்தனார் ஒருவர் சிவன் கோயிலை நோக்கி கும்பிட்டபடி அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை 4.30 மணிக்கு வந்த ஒருவர் நீண்ட நேரம் எந்த பேருந்திலும் ஏறாமல் காத்திருந்தார். 6 மணிக்கு அவர் இருந்த இடத்தில் இருந்தே எதிரே இருக்கும் மெய்நின்றநாதர் கோயிலை நோக்கி கும்பிட்டு வணங்கினார்.
நீண்ட நேரம் வணங்கிய பிறகு அருகில் புதைந்து கிடந்த கருங்கல்லை நீண்ட சிரமத்திற்கு பிறகு பெயர்த்து எடுத்து தன் தலையில் வேகமாக தாக்கிக் கொண்டு கல்லை பெயர்த்த இடத்திலேயே போட்டுவிட்டு அதே இடத்தில் படுத்துக் கொண்டார்.
இந்த திடீர் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பஸ் பயணிகள் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கல்லால் தாக்கிக் கொண்ட இடத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது அங்கு வந்த சிலர் இவர் அதிகாலையில் மேற்கு பக்கம் இருந்து வந்தார் என்றும் தன்னை கொத்தனார் என்று சொன்னார் என்றும் கூறினார்.
கிட்டதட்ட ஒரு மணி நேரம் வரை ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை சிலர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து ஏற்றினார். அவர்கள் கூறும் போது, "மன்னார்குடியில் இருந்து கட்டிட வேலைக்காக வந்து தங்கி இருக்கிறோம். குடிசையில் ஆளைக் காணவில்லை என்று தேடி வந்தோம். இங்கே ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்" என்று சொல்லிவிட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பேருந்து நிலையம் அருகில் ஒருவர் தன்னை தானே கல்லால் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications