மது குடித்து சொத்தை அழித்த மகன்- தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய்!
ஈரோடு: ஈரோட்டில் மது குடித்து சொத்தை அழித்ததால் கொலை செய்தேன் என்று மகனை கொன்ற தாய் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி, தனது தாய் கருப்பாத்தாள் உடன் ஊத்துக்குழியில் வசித்து வருகிறார். லாரி டிரைவரான வேலுச்சாமி சரியாக வேலைக்கு செல்லாததால் தினசரி மதுகுடிக்க தனது தாயிடம் பணம் கேட்டு தொல்லை படுத்தி வந்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்றை விற்று வீட்டை விற்ற பணத்தையும் தினசரி மது குடிப்பதற்காக தனது தாயிடம் சண்டை போட்டு வாங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் தனது மகன் மது குடிக்க பணம் வாங்கியதில் வீட்டை விற்ற பணமும் தீர்ந்து போனது.
தொடர்ந்து பணம் கேட்டு தன்னை துன்புறுத்தியதால் இவனை விட்டு வைக்கக்கூடாது என கோபமுற்று நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டில் படுத்திருந்த வேலுச்சாமியை, வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து "இதோடு நீ தொலைந்து போ" என அவர் தலை மீது கல்லை போட்டு கொன்றுள்ளார் கருப்பாத்தாள்.
மது குடித்து சொத்தை அழித்தும், தாய் என்றும் பாராமல் மதுகுடிப்பதற்காக பணம் கேட்டு என்னை அடித்து துன்புறுத்தியதாலே அவனைக் கொன்றேன் என வேலுச்சாமியின் தாய் கருப்பாத்தாள் போலீசாரிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.