மனைவியைக் கொன்று வீட்டினுள் புதைத்த கணவன்!
தாராபுரம்: திருப்பூரில் மனைவியைக் கொன்று வீட்டிற்குள்ளேயே புதைத்து விட்டு தப்பித்த கணவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் ஊத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய முதல் மனைவி கவிதா. இவர் திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் செங்கல்சூளையில் தன்னுடன் தங்கி வேலை பார்த்த தர்மபுரியை சேர்ந்த வெண்ணிலா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு 3 வயதில் வீரலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமியை கணேசனின் தாயார் நாச்சம்மாள் வளர்த்து வருகிறார். கடந்த 17 ஆம் தேதி கோவையில் இருந்து தளவாய்பட்டிணத்திற்கு கணேசனும், அவருடைய மனைவி வெண்ணிலாவும் வந்தனர். அதன்பின்னர் வெண்ணிலாவை காணவில்லை.
வெண்ணிலாவை எங்கே என்று கணேசனிடம், அவருடைய அக்காள் முருகேஸ்வரி கேட்டபோது வெண்ணிலா அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளதாக கணேசன் பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கணேசன் வீட்டிற்கு சென்ற முருகேஸ்வரி, அங்கு வீட்டின் முற்றத்தில் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணலை காணாது அந்த மணல் எங்கே என்று கணேசனிடம் கேட்டுள்ளார்.
அப்போதுதான் வெண்ணிலா தூக்குப்போட்டு இறந்துவிட்டதாகவும், அது வெளியில் தெரிந்தால் ஊரார் நம்மை கேவலமாக நினைப்பார்கள் என்று வெண்ணிலாவின் உடலை வீட்டிற்குள் புதைத்து, அதன் மேல் மணலை கொட்டி நிரப்பி விட்டதாகவும் கணேசன் கூறினார்.
பின்னர் வீட்டை திறந்து மணல் திட்டை தனது அக்காளிடம் காட்டிய கணேசன் அங்கிருந்து தலைமறைவானார். இது குறித்து முருகேஸ்வரி தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று அங்கு மணல் திட்டாக இருந்த பகுதியை தோண்டினார்கள். அப்போது துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
மணல் முழுவதையும் அப்புறப்படுத்திய நிலையில் வெண்ணிலா உடலை புதைத்து அதன் மீது செங்கற்களை வரிசையாக அடுக்கி அதன் மேல் சிமெண்டு கலவையை போட்டு நன்கு பூசி உள்ளது தெரியவந்தது. இதற்கிடையில் நேரம் மாலை 6 மணி ஆகி விட்டதால் உடலை தோண்டும் பணியை போலீசார் நிறுத்தினார்கள்.
இன்று ஆர்.டி.ஓ.சரவணமூர்த்தி முன்னிலையில் வெண்ணிலாவின் உடல் தோண்டும் பணி தொடங்கியது. அரசு டாக்டர்கள் முன்பு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதால் யாருக்கும் தெரியாமல் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்து விட்டதாக தனது அக்காள் முருகேஸ்வரியிடம் கூறிய கணேசன், வெண்ணிலா தூக்குப்போட்டு இறந்ததை ஏன் மறைக்க வேண்டும்.
மேலும் உறவினர்களுக்கு தெரியாமல் வீட்டிற்குள் வெண்ணிலா உடலை புதைக்க காரணம் என்ன. சம்பவம் நடைபெற்று 6 நாட்கள் ஆகி விட்ட பிறகும் தகவல் சொல்லாமல் தலைமறைவாக இருக்க காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். எனவே கணேசனை பிடித்தால்தான், வெண்ணிலாவை அவர் கொலை செய்தாரா என்று தெரியவரும்.
அவரை கைது செய்ய தாமதம் ஆகும் பட்சத்தில் வெண்ணிலா உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெண்ணிலா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என தெரியவரும்.
ஆனால் வெண்ணிலா உடலை புதைத்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே போலீசார் சென்றபோது அங்கு வீட்டின் கூரை பகுதி உயரம் குறைவாக இருந்துள்ளது.
எனவே வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்பு இல்லை என்றும், வெண்ணிலாவை கணேசன் கொலை செய்து விட்டு, பிணத்தை வீட்டிற்குள் புதைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.இந்த சம்பவம் தளவாய்ப்பட்டிணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications