மனைவியை மிரட்டியதால் ஐஸ் பேக்டரி ஊழியரைக் கொன்ற கணவன்!
எடப்பாடி: நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய மனைவிக்கு தொந்தரவு அளித்து வந்த ஐஸ் கம்பெனி ஊழியரை வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வாசுகி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கேசவன்.
இவர் தனியார் ஐஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
கொடூரமான கொலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக சங்ககிரி பகுதிக்கு வந்த அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தேடுதலில் கேசவன் சங்ககரி ஆவரங்கம்பாளையம் இடையப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வந்தனர்.
தீவிர விசாரணையில் போலீஸ்:
சம்பவ இடத்துக்கு சேலம் மாவட்ட போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
5 வருடத்திற்கு முன் காதல்:
இந்நிலையில் விசாரணையில் கேசவனின் பெற்றோர் சில விவரங்களைத் தெரிவித்தனர். அதன்படி, கேசவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர். அப்போது மணிமேகலைக்கு 18 வயது ஆகாததால் பிரித்து விட்டனர்.
வேறொரு திருமணம்:
இந்த நிலையில் மணிமேகலையை ஈரோடு நாராயணன் வலசு பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். அவர்களுக்கு தற்போது 2½ வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
வாழப் பிடிக்காத மணிமேகலை:
மேலும் மணிமேகலை கடந்த 3 மாதமாக கேசவனை தொடர்பு கொண்டு, நான் உன்னோடு வந்து விடுகிறேன். எனக்கு இங்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டது.
கேசவனை மிரட்டிய ரவி:
இதையடுத்து இருதரப்பினரும் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தோம். போலீசார் எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது ரவி, எங்களது மகனை பார்த்து இன்னும் ஒரு மாதத்தில் உன்னை தீர்த்து கட்டாமல் விடமாட்டேன் என்று கூறி சென்றார். அதன்பின்னர்தான் கேசவனைக் காணவில்லை என்று கூறினர்.
கொலை செய்த கணவன்:
இதனையடுத்த விசாரணையில் கேசவன், மணிமேகலைக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததால் ரவிதான் அவரைக் கொலை செய்துள்ளார் என்ற உண்மை தெரியவந்தது. இதனையடுத்து ரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.