கள்ளக்காதலால் விபரீதம் - ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற கள்ளக்காதலனுக்கு வலை!
நாகை: நாகையில் காதலியின் ஒன்றரை வயது குழந்தையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள மேளவாக்கம், பெரியார் வீதியை சேர்ந்தவர் மலர்க்கொடி. இவர் சீர்காழியை சேர்ந்த நடராஜ் என்பவரை இரு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ராஜு என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மன்னார்குடிக்கு வேலைக்கு வந்த உடுமலையை சேர்ந்த அப்பாஸ் என்ற நடராஜின் நண்பருக்கும், நடராஜின் மனைவி மலர்க்கொடிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால், கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த மாதம் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய மலர்கொடி உடுமலை அருகே உள்ள ஆலம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
மலர்கொடி இருக்கும் தகவலறிந்து ஆலம்பாளையம் வந்த நடராஜும் மலர்கொடியையும், அப்பாஸையும் பார்த்துவிட்டு உடுமலையிலேயே தங்கினார். பலமுறை மனைவியும், கள்ளக்காதலனும் தங்கியிருந்த பண்ணைக்கும் வந்து சென்றுள்ளார். இந்நிலையில், குடிப்பழக்கம் உள்ள அப்பாஸ், மலர்க்கொடியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி இரவு மலர்கொடி, அப்பாஸ் இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில் போதையிலிருந்த அப்பாஸ், மலர்க்கொடியை கீழே தள்ளி அடித்து உதைத்ததுடன் குழந்தை ராஜுவை துாக்கி தரையில் அடித்துள்ளார்.
இதனால், பாதிக்கப்பட்ட மலர்கொடி அன்றைய தினம் இரவே குழந்தையுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். இருநாட்களாக பட்டினியாக இருந்ததாலும், கள்ளக்காதலன் தாக்கியதாலும் சோர்வுடன் இருந்த அவர் குழந்தையுடன் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வந்ததும் மயங்கி விழுந்துள்ளார்.
இதை கவனித்த அருகிலிருந்தவர்கள் மலர்கொடியையும், குழந்தையையும் எழுப்ப முயன்றனர். ஆனால், குழந்தை சலனமின்றி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மலர்க்கொடி மற்றும் குழந்தையை போலீசார் மீட்டு போலீசார் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மலர்க்கொடியிடம் போலீசார் விசாரித்ததில், நடந்த சம்பவங்கள் தெரியவந்தது. பின்னர், தகவலரிந்து உடுமலை வந்த மலர்க்கொடியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து மலர்கொடியின் கள்ளக்காதலன் அப்பாஸ் மற்றும் கணவர் நடராஜையும் தேடிவருகின்றனர்.