"கந்துவட்டிக்காக மிரட்டினார் இன்ஸ்பெக்டர்”- தற்கொலைக்கு முயன்றவரின் வீடியோவால் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் கந்து வட்டிக் காரர்களுக்கு ஆதரவாக மிரட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர் கந்துவட்டி வாங்கி திருப்பி தராததாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வந்தபோது பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் அவரிடம் அந்த இன்ஸ்பெக்டர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் காட்சி வாட்ஸப் வீடியோவாக வெளிவந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், "என்னுடைய பெயர் பாலசேகரன். நான் தொடர்ந்து பல ஆண்டுகளாக எந்தவிதமான குற்றப்பின்னணியும் இல்லாமல் குடும்பத்துடன் திருச்சியில் குடியிருந்து வருகிறேன்.

எனக்கும் திருச்சி மாநகரம், கே.கே.நகர், கேவர்தனம் கார்டன் எண் 20 என்னும் முகவரியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி சாவித்திரி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக வியாபார நிமித்தம் கொடுக்கல், வாங்கல் இருந்து வருகிறது.
கடந்த மார்ச் 2015 இல் மேற்சொன்ன சாவித்திரிக்கு நான் தரவேண்டிய ரூபாய் 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட காலம் அவகாசம் கேட்டு திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று வட்டி மட்டும் கொடுத்து வந்தேன்.
இந்த நிலையில் நான் ஏமாற்றியதாக அவர் என்மீது பொய் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸார் விசாரணை என்கிற பெயரில் என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தனர். இரண்டு மாதங்களுக்குள் 2 இலட்சம் கொடுக்க வேண்டும் என்று என்னிடம் இரண்டு செக் வாங்கி வைத்துக்கொண்டனர்.
பேசினபடி அடுத்த மாதம் நான் 1 இலட்சம் கொடுத்தேன். பிறகு அடுத்த தவணைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போதே கே.கே. நகர் காவல்நிலையத்தை சேர்ந்த ரவி என்பவர் திருச்சி பக்கம் வந்துவிடாதே உன்மீதும், உன் மனைவி, பிள்ளைகள் மீது வழக்கு பதிவாகிவிட்டது. திருச்சிக்கு வந்தே அவ்வளவு தான் என்று மிரட்டினார்.
நான் இதை வைத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் என்னை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு வாங்கியிருந்தேன். இருந்தபோதும் தொடர்ந்து போன் மூலமாக டார்ச்சர் செய்து கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில் எப்படியோ கஷ்டப்பட்டு அடுத்த தவணையை ஏற்பாடு செய்து இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் இருக்கிறேன் நான் வந்த பிறகு கொடு என்று என்னிடம் சொன்னார்.
அவர் உடல்நிலை சரியாகி வருவதற்குள் என்னிடம் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. திரும்பவும் சில நாட்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் அதையும் மீறி ஊரில் நேற்று வந்த என்னிடம் போலீஸாரை அனுப்பி என் வீட்டிற்கு வந்து என் கதவுகளை எல்லாம் உடைத்து உன்னை கைது பண்ணி இன்ஸ்பெக்டர் இழுத்து வர சொன்னார் என்று சொல்லவும் எனக்கு பயம் வந்துவிட்டது.
நான் பயந்து போய் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டேன். அதன் பிறகு ஜன்னல், கதவுகளை எல்லாம் உடைத்து என்னை, ஒரு தீவிரவாதியை நடத்துவது போல நடந்து கொண்டார்கள். நான் பயந்து போய் தான் வேறு வழி தெரியாமல் என்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
அதுவரை என்னை மிரட்டிக்கொண்டுயிருந்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தற்கொலை எண்ணத்தைக் கைவிடக் கோரி வருந்தி நானும் புள்ளக்குட்டிகாரன் எனக் கூறி சமாதானம் செய்து என்னை தற்கொலை செய்யவிடாமல் தடுத்தார். ஒரு கந்துவட்டி கும்பலிடமிருந்து என்னை காப்பாற்றாமல் அவர்களுக்காக பணத்தை வசூல் வேட்டையில் இறங்கியது, என்னை ஓட ஓட விரட்டுவது தான் என்னை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியது" என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications