சிறந்த கடம்.. மானாமதுரை மீனாட்சியம்மாளுக்கு சங்கீத அகாடமி விருது...!
மானாமதுரை: மானாமதுரை கடத்திற்கு தேசிய சங்கீத அகாடமியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மானாமதுரையைச் சேர்ந்த கடம் தயாரிப்பாளர் மீனாட்சியம்மாளுக்கு சிறந்த கடம் தயாரிப்பாளருக்கான சங்கீதா அகாடமியின் விருது கிடைத்துள்ளது. இதை அகாடமியின் தலைவர் லீலா சாம்சன் அறிவித்துள்ளார்.
பிரபலமான மானாமதுரை கடத்திற்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.
இசைக் கருவிகளில் முக்கிய இடம் வகிப்பது கடம். எதற்காக மண் பானையை வைத்துக் கொண்டு கர்நாடக இசைக் கச்சேரிகளில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷயம் தெரியாதவர்கள் ஆச்சரியப்படலாம்.

மானாமதுரை கடம்
ஆனால் ஒரு அருமையான இசைக் கருவிதான் இந்த கடம். இந்த கடமானது, மானாமதுரையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இது இசைத்துறை சாராத பலருக்கும் தெரியாத செய்தி. ஆனால் மானாமதுரை கடத்திற்கு இப்போது இசை அங்கீகாரம், அதாவது தேசிய சங்கீதா அகாடமியின் விருது கிடைத்துள்ளது அந்த கடத்தின் மகாத்மியத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

இளையராஜாவின் மனம் கவர்ந்த கடம்
பெரும்பாலான கர்நாடக இசைக்கலைஞர்கள் மானாமதுரை கடத்தை தான் தேர்வு செய்து கச்சேரிகளில் பயன்படுத்துவார்கள். அதை விட முக்கியமாக, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோரும் கூட மானாமதுரை கடத்தை அதிகம் நேசிப்பவர்கள், பயன்படுத்தும் கலைஞர்கள் ஆவர்.

விக்கு விநாயக் ராம்- சுகன்யா ஆதரவு
இப்படிப்பட்ட சிறப்பு கொண்ட மானாமதுரை கடத்திற்கு சிறந்த கடம் என விருது வழங்க வேண்டும் என பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், சுகன்யா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வந்தனர்.

மீனாட்சியம்மாள்
தற்போது டெல்லி தேசிய சங்கீத அகாடமி, சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சி அம்மாளை தேர்வு செய்துள்ளனர். இந்த விருதின் மூலம் ஓரு லட்ச ரூபாய் பணமுடிப்பும், தாமிர பட்டயமும் சான்றிதழ் ஆகியவை அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

40 வருடமாக தயாரிக்கும் மீனாட்சியம்மாள்
மீனாட்சியம்மாள் கடந்த 40 ஆண்டுகளாக கடம் தயாரித்து வருகிறார். தனக்கு கிடைத்துள்ள விருது குறித்து மீனாட்சியம்மாள் கூறுகையில், 15 வயதில் இருந்து கடம் தயாரிக்கிறேன். எனது மாமா, கணவர் வரிசையில் நாங்கள் கடம் தயாரிக்கிறோம்.

சிறந்த கடம்...
கர்நாடக இசையில் பங்கு பெறும் பெரும்பாலான கடங்கள் இங்கு தயாரானவைதான் என்றார். மீனாட்சியின் மகன் ரமேஷ் கூறுகையில், சிறந்த கடம் தயாரிப்பாளர் விருது கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல இசைக்கலைஞர்கள் இங்கிருந்து கடம் வாங்கிச் செல்கிறார்கள் என்றார்.

ஒரு நாளைக்கு 20 கடங்கள் தயாரிப்பு
மானாமதுரையில், நாளன்றுக்கு 3 பேர் சேர்ந்து 20 கடங்கள் வரை தயாரிக்கின்றனராம். இதில் சுருதி, லயம் சேர்ந்து கச்சேரிகளில் பங்கு பெறும் வண்ணம் 10 முதல் 14 கடங்கள் வரையே தேர்வு செய்யப்படும்.

கண்மாய் மண்ணெடுத்து...
மானாமதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய கிராம கண்மாய்களில் இருந்து மணல் எடுத்து வரப்பட்டு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கடம் தயாரிக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக கடம் தயாரிக்கும் இவர்களுக்கு சற்று தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும் கடம் தயாரிப்பாளர்களின் குடும்பமும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிறந்த கடம் தயாரிப்பாளர் விருது பெற்றிருப்பது மண் பாண்ட தொழிலாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications