10 பேரை காவு கொண்ட மணப்பாடு படகு விபத்து.. படகு உரிமையாளர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து அந்தப் படகின் உரிமையாளர் கெவினை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் பாரம் தாங்காமல் படகு கடலுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் விழுந்து தத்தளித்த சிறுமி உள்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்த அனைவரும் திருச்சி மற்றும் உடன்குடி அருகேயுள்ள பட்டுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீன் பிடிக்கும் படகில் அனுமதியின்றி 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படகை ஓட்டிச் சென்ற செல்வம் என்பவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து படகின் உரிமையாளர் கெவினை போலீஸார் இன்று கைது செய்தனர். சுற்றுலா படகை இயக்க அப்பகுதியில் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.