கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்த மணிசங்கர அய்யர்... ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங். ஆதரவு?
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், திமுக தலைவர் கருணாநிதியையும் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலிலையும் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடா விட்டாலும், காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், தேர்தலில் போட்டியிடவும் இல்லை, வேறு கட்சிகளுக்கு ஆதரவும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்தார். காங்கிரஸின் இந்த முடிவால் திமுக தரப்பு ஏமாற்றமடைந்தது. யாருமே திமுகவை ஆதரிக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர். அதனைத் தொடர்ந்து ஸ்டாலினையும் அவர் சந்தித்தார்.
ஜெயந்தி நடராஜன் கட்சியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைப் பெற்றது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.