அதிமுகவில் 'குடி' குடும்பத்தை தவிர யாருக்குமே முதல்வர் பதவிக்கான தகுதி கிடையாதா?
அதிமுகவில் மன்னார்குடி குடும்பத்தைத் தவிர தங்களில் ஒருவர் கூட முதல்வர் பதவிக்கு தகுதி இல்லை என நினைப்பது அவலத்தின் உச்சம்.
சென்னை: எம்ஜிஆர் தொடங்கிய கட்சி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய அதிமுக... இன்று முதல்வர் பதவிக்கான தகுதியான நபர்களே இல்லாமல் மன்னார்குடி கோஷ்டியிடம் சரணாகதி அடைந்திருக்கிறது அவலத்தின் உச்சம்.
ஜெயலலிதா மறைவில் தொடங்கிவிட்டது அதிமுகவின் அழிவுகாலம். முதல்வர் நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய அரசு உட்கார வைத்தது. அதிமுகவை ஜெயலலிதாவின் 'தனிப்பட்ட' உதவியாளர் சசிகலா கைப்பற்றிவிட்டார்.
சசிகலா இப்போது தம்மை டூப் ஜெயலலிதாவாக்கிக் கொண்டு வலம் வருகிறார். அவரை அடுத்ததாக முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கிறது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'கூட்டம்'. மந்தையாடுகள் ஒரு திசையை நோக்கிச் செல்வதைப் போல சசிகலா சிறைக்கு போனால் நடராஜன், தினகரன், திவாகரன் என மன்னார்குடி கோஷ்டியை நோக்கியே பார்வையை வீசுகிறது அதிமுக.

மகா கேவலம்
தங்களில் ஒருவருக்கு கூட முதல்வர் பதவிக்கான தகுதியே கிடையாது என தீர்மானமாக இருக்கிறது அதிமுகவும் அதன் எம்.எல்.ஏ.க்களும். அதிமுகவில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என மெத்த படித்த பலரும் இருந்தாலும் மந்தை கூட்டங்களில் ஒன்றாகவே தங்களை தகவமைத்துக் கொண்டு மன்னார்குடி கோஷ்டிக்காக தவம் கிடப்பது மகா கேவலம்.

சதுரங்க ஆட்டமா?
ஒட்டுமொத்த தமிழகமே மன்னார்குடி கும்பலுக்கு எதிராக கொதித்துப் போய்கிடக்கிறது. ஓட்டுப் போட்ட மக்களைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கல்லா பெட்டிகளை நிரப்புவதற்கான கஜானாவாக முதல்வர் நாற்காலியை வைத்து சதுரங்க ஆட்டம் போடுகிறார்கள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.

தன்மானமே இல்லையா
சசிகலாவும் நடராஜனும் தினகரனும் திவாகரனும்தான் அதிமுகவின் எதிர்காலமா... உங்களில் தன்மானம் உள்ள நபர் ஒருவர்கூட இல்லையா? என பொங்குகிறது தமிழகம். அதிமுகவினரின் முடிவு ஒட்டுமொத்த தமிழக மக்களை தலைகுனிய வைத்திருக்கிறது. இனி நாம் ஓட்டே கேட்க தெருவில் இறங்க முடியாது என்று தெரிந்தே இத்தகைய அவலத்தை தமிழகத்தில் அரங்கேற்றுகிறது அதிமுக.

மமதையா?
பொதுமக்களை விட்டுவிடுங்கள்... அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வீதிக்கு வீதி இறங்கி போராடுகிறார்களே.. அவர்களின் உணர்வுகளுக்கு கூட மதிப்பளிக்க முடியாத மமதை கூட்டமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கை கோர்த்திருக்கிறார்கள்...

வரலாறு இருக்கிறது...
கோபம், கொந்தளிப்பு, ஆவேசம் எல்லாம் ஊமை காயங்களாக இருக்கும்....அதுவுமே ஒருநாள் புரட்சியாகவும் வெடிக்கும் என்பதை ஜல்லிக்கட்டு வரலாற்றுக்குப் பின்னரும் பாடம் கற்காத அதிமுக எம்.எல்.ஏ.க்களை என்னவென்று சொல்வது?












Click it and Unblock the Notifications