அடேங்கப்பா.. இத்தனை நூதன முறைகேடுகளுக்கு நடுவே ஆர்.கே.நகரில் தேர்தல் அவசியமா?
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களை தங்கள் வசம் இழுப்பதற்காக பணம், பரிசுப்பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள் ஆகியவற்றை கொண்டு முறைகேடாக நடக்கும் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முக்கியத்துவம் கருதி களத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றன. இந்த தேர்தலானது உள்ளாட்சி தேர்தலுக்கு அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
இதனால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு வேட்பாளர்களும் வைராக்கியத்துடன் போராடி வருகின்றனர்.

சூடு பிடிக்க தொடங்கியது
இந்நிலையில் வேட்புமனு, பிரச்சாரம் என்று தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதும் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை நியமித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. எனினும் பல்வேறு வகைகளில் நடந்து வரும் பணம் வினியோகத்தை அவர்களால் தடுக்க முடியாமல் திணறுகின்றனர்.

அரசு அதிகாரிகள் மாற்றம்
முறைகேடுகளை தடுப்பதற்காக போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இடைத்தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் ஆணையர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.

கோடிக்கோடியாக பணம்
எனினும் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிய காலத்தில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் நாள் நெருங்க நெருங்க பணம் வினியோகம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு விடிய விடிய பணம் வினியோகத்தில் ஈடுபட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு
பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பது, பொதுவான இடத்தில் வைத்து பணம் வழங்குவது, அரசு பேருந்து நடத்துநர்களிடம் பணம் கொடுத்து வினியோகிக்க செய்வது என்று பல்வேறு யுத்திகளை கையாண்டால் பறக்கும் படை அதிகாரிகளிடம் பிடிபடுவதால் வாக்காளர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருள்களும், கிப்ட் வவுசர்களும் வழங்கப்பட்டு வருகிறது.

பரிசுப் பொருள்கள்
இந்த வவுசர்கள் மூலம் குறிப்பிட்ட கடைகளில் பயனாளிகள் தங்களுக்கு தேவைப்படும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இன்னும் ஒரு கட்சி நூதன முறையில் பரிசுகளை வழங்கி வருகிறது. அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே வெளியூர் ஆள்கள் மூலம் ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மக்களோடு மக்களாக பழகி வருகின்றனர் நிர்வாகிகள்.

திருமணம் மண்டபங்கள் நிரம்பின
அந்த நிர்வாகிகள் அங்குள்ள திருமண மண்படங்களில் வீட்டு உபயோக பொருள்கள், எல்க்ட்ரானிக் பொருள்கள் என வாங்கிக் குவித்து வைத்துள்ளனர். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருள்களை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உறுதி அளிக்க செய்கின்றனர். ஆர்.கே.நகர் மக்களும் கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கின்றனர்.

இந்த தேர்தல் அவசியமா
வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பது தொடர்பாக செய்திகள் அதற்கான ஆதாரத்துடன் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையமும், அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. இத்தனை முறைகேடுகளுக்கு மத்தியில்
80 சதவீதம் பணம் வினியோகிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தல் நடத்தினால் ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகி தேர்தல் நடத்தியதற்கான பயன் இல்லாமல் போய்விடும். எனவே தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் பணம் பாய்ந்ததை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது போல் இந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து ஜனநாயக மாண்பை காக்க வேண்டும் என்பது தமிழக மக்கள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications