மறக்க முடியாத மார்ச் 2015... ஜாம்பவான் லீ குவான் யூ மறைந்தார்.. வாஜ்பாயிக்கு பாரதரத்னா!
சென்னை: மார்ச் மாதமும் மறக்க முடியாத பல நிகழ்வுகளுடன் நம்மைக் கடந்து சென்றது இந்த வருடம். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு மத்திய பாஜக அரசு பாரதரத்னா விருது கொடுத்துக் கெளரவித்தது. மறுபக்கம், சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.
இந்தியாவிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி பல முக்கிய நிகழ்வுகளை இந்த மாதம் உலகம் கண்டது.
இந்த மாதத்தில்தான் இலங்கை சென்றார் பிரதமர் மோடி. யாழ்ப்பாணத்திற்குப் போன அவர் அங்கு இந்தியா கட்டிக் கொடுத்த வீடுகளையும் தமிழர்களுக்கு அளித்தார்.

காஷ்மீரில் ஆட்சி மாற்றம்
மார்ச் 1ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில புதிய முதல்வராக முப்தி முகம்மது சயீத் பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். பாஜகவும் ஆட்சியில் பங்கேற்றது.

அக்ரிக்கு ஆப்பு
மார்ச் 6ம் தேதி அரசு அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிக்கிய அக்ரி கிருஷ்ணமூ்ர்த்தி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இலங்கையில் மோடி
மார்ச் 13ம் தேதி இலங்கை சென்றார் பிரதமர் மோடி. அங்கு அதிபர் சிறிசேனாவைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்தார்.

டி.கே.ரவி தற்கொலை
மார்ச் 16ம் தேதி கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி டி.கே. ரவி சர்ச்சைக்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

டுனிஸில் கொடூரத் தாக்குதல்
மார்ச் 18ம் தேதி டுனீஷியாவின் தலைநகர் டுனிஸில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

லீ குவான் யூ மரணம்
சிங்கப்பூரின் சிற்பி, தமிழர்கள் மீதும் அவர்களின் உழைப்பு மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்த லீ குவான் யூ மார்ச் 23ம் தேதி மரணமடைந்தார்.

அமராவதி
மார்ச் 23ம் தேதி ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

ஆல்ப்ஸில் நொறுங்கிய ஜெர்மனி விமானம்
மார்ச் 23ம் தேதி பிரெஞ்சு நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஜெர்மனி பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 150 பேர் பலியானார்கள்.

பாரதரத்னா வாஜ்பாய்
மார்ச் 27ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. வாஜ்பாயின் இல்லத்திற்கே சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார்.

சாம்பியன் ஆஸ்திரேலியா
மார்ச் மாதம் 29ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தனது 5வது உலகக் கோப்பையை வென்றது.












Click it and Unblock the Notifications