ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு: பதக்கத்தை திருப்பி கொடுத்த 'தங்க தமிழன்' மாரியப்பன்!
ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார் சேலம் மாரியப்பன்.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் தாம் வென்ற தங்கப் பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார் மாரியப்பன்.
உலகை உலுக்கிய வரலாற்றுப் புரட்சிகளில் தமிழகத்து மாணவர்கள், இளைஞர்களின் அறவழி போரும் இடம்பிடித்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரவே முடியாது என ஏமாற்றிய அரசாங்கங்களை அடிபணிய வைத்திருக்கிறது இளைஞர் பட்டாளம்.
வீட்டு பிள்ளைகள் போர்க்களத்தில் நிற்க குடும்பம் குடும்பமாக பெரியவர்களும் அணி திரண்டு ஆதரவு தர ஒட்டுமொத்தமாக தமிழகமே போர்க்களமாக காட்சி தருகிறது. யுத்தமும் ரத்தம் சிந்தாமலும் சரித்திரம் படைக்கிறது தமிழர் படை.
இந்த புரட்சி ஜோதியில் குடும்பம் குடும்பமாக இணைத்துக் கொள்ளும் காட்சிகள் ஒவ்வொரு நகரத்திலும் காண முடிகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்து நெகிழ வைத்திருக்கிறார்.