மசாஜ் சென்டரில் விபசாரம்: பிரபல பெண் தரகர் கைது- 4 இளம்பெண்கள் மீட்பு
சென்னையில் மசாஜ் சென்டர்களில் வேலைக்கு ஆட்கள் என விளம்பரப்படுத்தி அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறை ஆணையர் ஜார்ஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் பிரபல மசாஜ் கிளப்புகளை கண்காணித்து, அங்கு விபசாரத்தில் தள்ளப்படும், இளம்பெண்களை மீட்டு வருகிறார்கள்.
வேளச்சேரி மசாஜ் சென்டர்
வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகரில் செயல்படும் மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சோதனை நடத்தப்பட்டது.
2 பெண்கள் மீட்பு
சோதனையில், அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மசாஜ் கிளப்பை நடத்திய பால் மோசஸ்ராஜ் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெண் தரகர்
சென்னை அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்தவர் பிரியா என்ற அமுதா (32). இவர் பிரபல விபசார தரகர் ஆவார். ஏற்கனவே இவர் விபசார வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர். தற்போது மீண்டும் அவரை விபசார தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 இளம்பெண்களும் போலீசாரால் மீட்கப்பட்டனர்.
அண்ணா நகரில் ரெய்டு
கடந்த ஜூன் மாதம் சென்னை அண்ணாநகர் 2-வது மெயின் ரோடு ‘எப்' பிளாக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் பானு (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
5 இளம்பெண்கள் மீட்பு
இவர் மண்ணடியை சேர்ந்தவர். அங்கு அவர் விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.
கிழக்குக் கடற்கரை சாலையில்
அதே போன்று சென்னை நீலாங்கரை இ.சி.ஆர். ரோட்டில் செயல்பட்டு வந்த ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அதன் உரிமையாளர் சுராஜ் (34) கைது செய்யப்பட்டார். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட வைத்திருந்த வடமாநில இளம் பெண்கள் 3 பேரை காவல்துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடபழனியில் கைது
வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் மசாஜ் என்ற பெயரில் விபசார தொழில் நடத்தி வந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் எலிசபெத் ராணி, நிர்வாகி சக்திவேல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை மீட்டனர்.
கோயம்பேட்டில் கைது
இதே போல் கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் விபசார தொழில் செய்து வந்த பத்மா கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆந்திராவைச் சேர்ந்த 2 இளம்பெண்களும் மீட்கப்பட்டனர். மாங்காட்டில் விபசாரம் நடத்தி வந்த கவிதா என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த ஒரு இளம்பெண்ணும் மீட்கப்பட்டார்.
ஆசை வார்த்தை கூறி
போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இண்டர்நெட் மற்றும் செய்தி தாளில் மசாஜ் சென்டரில் வேலை செய்ய படிப்பு, முன் அனுபவம் தேவையில்லை, மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் என்ற ஆசை வார்த்தைகள் மூலம் விளம்பரப்படுத்தி, நல்ல வேலை என்று நம்பி வரும் இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தி, பிறகு கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரிய வந்தது.
குடும்பப்பெண்களும்
மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர்களுக்கு சாதாரணமாகச் செல்லும் அப்பாவிக் குடும்பப் பெண்களும், இந்த விபசாரப் படுகுழியில் மாட்டிக்கொள்கின்றனர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை தெரியவந்துள்ளது.