நேற்றுதான் மடியில் உட்கார வைத்து காது குத்தின மாதிரி இருக்கு! இன்று பெரியமனுஷியாகிவிட்டாளே!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மஞ்சள் நீராட்டு விழாவில் தனது தங்கை மகளை பல்லக்கில் அமர வைத்து ஊரே மெச்சும் அளவுக்கு தாய்மாமன் சீர் செய்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய தங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பிரம்மாண்ட சீர் வரிசைகளை கொண்டு வந்து அசத்தினார்.

அந்த சிறுமியை ஆடி காரில் அமர வைத்து மேளதாளம், வாணவேடிக்கை , செண்டை மேளம் முழங்க மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் மயில் போல் இருந்த பல்லக்கில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றார்.
அந்த காலத்தில் மஞ்சள் நீராட்டு விழாவை மிகவும் எளிமையாக செய்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பலர் மஞ்சள் நீராட்டு விழா எனப்படும் பூப்புனித விழாவை வெகு விமரிசையாக செய்து வருகிறார்கள். அதிலும் தாய்மாமன் கொண்டு வரும் சீர்கள் ஊரே மெச்சும் அளவுக்கு இருக்கின்றன.
சகோதரியின் மகளோ, சகோதரரின் மகளோ பருவம் அடைந்துவிட்டால், அதில் தாய்மாமனுக்கும் அத்தைக்கும்தான் பெரிய செலவு இருக்கும். எல்லாரையும் விட அவர்களுடைய சீர்தான் மிகவும் முக்கியமானதாகும். அது போல் தாய்மாமன்தான் முதல் மாலையை அந்த பெண்ணுக்கு அணிவிக்க வேண்டும்.
திருமணத்தின் போதும் கூட அவர்தான் அணிவிக்க வேண்டும். அது போல் அத்தை உறவும் முக்கியமானது. நலங்கு வைக்கும் போது அத்தைக்குதான் முதல் மரியாதை! இது போல் பூப்பெய்த விழாக்களுக்கு அவரவர் வசதிக்கேற்ப நகைகள், புடவைகள் என சீர் செய்வது வழக்கம்.
வண்டி வண்டியாக சீர் செய்வார்கள். இரு தாய்மாமன்கள் இருந்தால் இருவரும் சேர்ந்து சீர்களை கொண்டு வருவார்கள். இதே போல் திருமணத்தின் போதும் தாய்மாமன் சீர் கொண்டு வருவார். தாயின் மறுஉருவம்தான் தாய்மாமன் என்பார்கள். அப்படிப்பட்ட தாய்மாமன் உறவுகளை சொல்லும் நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன.
அது போல் திருமணங்களில் மொய் எழுதும் போது தாய்மாமன் மொய் எழுதிய பிறகுதான் மற்றவர்கள் எழுதுவார்கள். அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் தரப்படும். குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தனது சகோதரியின் மகள் அல்லது மகனுக்கு தாய்மாமன் கொண்டு வரும் சீர்தான் அந்த ஊர் முழுக்க பேச்சாக இருக்கும்.
இந்த பழக்கம் தென் மாவட்டங்களில் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது உறவுகளை வலுவாக்கும். திருமணம் என்றில்லை, காதணி விழாவுக்கு கூட தாய்மாமன், சகோதரியின் குழந்தைக்கு மாலை போட்டு அவருடைய மடியில் உட்காரவைத்து காது குத்தப்படும். அது போல் மொட்டை போடும் சடங்கும் அப்படித்தான்.












Click it and Unblock the Notifications