பூஜ்யஸ்ரீ மதிஒளி ஆர்.சரஸ்வதி சென்னையில் முக்தி அடைந்தார்
பூஜ்யஸ்ரீ மதி ஒளி ஆர். சரஸ்வதி சென்னையில் முக்தி அடைந்தார்.
Recommended Video
சென்னை: சென்னை நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் தலைவரும், நிறுவனருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி (77) புதன்கிழமை முக்தி அடைந்தார்.
புதுச்சேரியில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி பிறந்த அவர் சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவர். தமிழ் அறிஞர், எழுத்தாளர், சமூக சேவகர், மனித நேயர், ஆன்மிக குரு என பன்முகங்களைக் கொண்ட மதிஒளி சரஸ்வதியின் பெற்றோர் ராமச்சந்திரன், ஜெயலட்சுமி. இளம் வயதிலேயே ஓவியம், பாட்டு, கவிதை, கதைகள் எழுதுவது உள்பட பல்வேறு கலைகளில் ஆர்வம் கொண்டிருந்த மதிஒளி சரஸ்வதி குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர்.
சிறு குழந்தைகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த அவர், 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையை நிறுவிய அவர், அதன் மூலம் மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டை விஸ்வேசபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலை அவர் முக்தி அடைந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் விஸ்வேசபுரம் இல்லத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையைச் சேர்ந்த ஆன்மிக தொண்டர்கள் பங்கேற்றனர்.