இதுக்கு கூடவா கப்பம் கட்டணும் ஆபீசர்.. மயிலாடுதுறை விஏஓவுக்கு மறக்க முடியாத பாடம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கேணிக்கரை தோப்புத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடு வைத்திருந்தார். அண்மையில் பெய்த மழையில் பசுமாடு காலமானது. இதற்காக நிவாரணத் தொகையாக 30 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கிராம உதவியாளரும் விஏஏவும் 3ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். அவர்களை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டாவில் பெயர் மாற்றப்போனால், நிலத்தை அளக்க போனால் சில அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் வேலை வாங்க முடியாத நிலை இருக்கிறது. முன்பு சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி விட்டு பணிகளை செய்வார்கள். இப்போது பணிகளை முடித்துவிட்டு லஞ்சம் கேட்கிறார்கள். வங்கி கணக்கில் அரசு நிவாரணங்கள் வந்ததும் லஞ்சம் கேட்கிறார்கள். சில பட்டா பெயர் மாற்றத்தை முடித்துவிட்டு லஞ்சம் கேட்கிறார்கள்.

அதேபோல் நிலத்தை அளந்து பணிகளை முடித்த பின்னர் சில நில அளவையர்கள் லஞ்சம் கேட்கிறார்கள். விஏஓ அலுவலகத்தை பொறுத்தவரை ஒரு சில கிராம உதவியாளர்கள் பணிகளை முடித்த உடன் பணம் கேட்பது நடக்கிறது. மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கேணிக்கரை தோப்புத் தெருவில் 30 வயதான பிரகாஷ் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு மாடு சமீபத்தில் பெய்த மழையில் காலமானது. இதற்கு நிவாரணம் கேட்டு பிரகாஷ், மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பசுமாடு இறந்ததற்கான நிவாரணத் தொகை ரூ.30 ஆயிரம், பிரகாசின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மேமாத்தூர் கிராம உதவியாளர் பாஸ்கரணி, இறந்த பசு மாட்டுக்கு நிவாரணம் கிடைத்ததற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு பிரகாசிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் இதுகுறித்து மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை பிரகாஷ், மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மயிலாடுதுறை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று 39 வயதாகும் ஜெயபிரகாசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக கிராம உதவியாளர் பாஸ்கரணி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications