காவு வாங்கிய கல்விக்கடன்: வங்கியின் வன்மத்தால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவர்!
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் என்னதான் கல்விக் கடன் இலவசம், வட்டி விகிதம் குறைவு என்றெல்லாம் அரசியல் வாதிகள் காட்டுக் கூச்சல் போட்டாலும், நடைமுறையில் கடன் கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.
வங்கிகளும், வங்கி ஊழியர்களும் படுத்தும் பாட்டில் இதுவரை மனதளவில்தான் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால், இன்றோ இக்கொடுமைகளின் உச்சமாக ஒரு உயிரே போயிருக்கின்றது.
அவமதிப்பின் விலை ஒரு உயிர்:
அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களை, சரியான வழிகளில் மக்களுக்கு அளிக்க அதிகாரிகள் தயாராக இல்லை என்பதற்கு இதுவே சாட்சி. இதனை நிரூபிப்பதற்கு விலைதான் கண்ணதாசன் என்ற மாணவரின் விலை மதிப்பற்ற உயிர்.
விவசாயி தந்தை:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தினைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர்தான் நம் கண்ணதாசன்.
மருத்துவராக்கும் ஆசை:
குழந்தைகளின் ஆசைகளை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் உருவமான ராஜா, கண்ணதாசனை அவரது விருப்பபடியே டாக்டர் ஆக்கி பார்க்க ஆசைப்பட்டார்.
அர்மேனியாவில் மருத்துவ படிப்பு:
அப்பாவின் ஆசைக்கேற்ப நல்ல புத்திசாலி மாணவனான கண்ணதாசனுக்கு தமிழகத்தில் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. ஆனாலும், வைராக்கிய மனிதரான ராஜா, மகனுக்கு அர்மேனியா நாட்டில் மருத்துவ படிப்பிற்கான இடத்தினைப் பெற்றார்.
சொத்துகள் அத்தனையும் செலவு:
தனியார் பள்ளியில் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்ந்த ராஜா, அதற்காக தன்னுடைய சொத்துக்கள் அத்தனையும் விற்று விட்டார். இந்நிலையில் ஒரு வருடமாகியும் கல்விக்கடன் தராமல் இழுத்தடித்துள்ளனர் போச்சம்பள்ளி இந்தியன் வங்கியினர்.
கல்விக் கடன் ரத்து:
நண்பர்களின் யோசனைகளுக்கு ஏற்ப இதுகுறித்து கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனால் கோவமடைந்த வங்கி மேலாளர், அது, இதுவென்று நொட்டை சொல்லியே மீண்டும் கடனை ரத்து செய்துள்ளார்.
கடந்து போன மூன்று வருடங்கள்:
இந்நிலையில்,அந்த மேலாளர் மாறியதால் புதியவர் வந்துள்ளார். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜா. அதற்குள் மூன்று வருடங்கள் கடந்து விட்டன.
நண்பர்கள் உதவி:
நான்காவது வருடத்திற்கு பணம் கட்ட வழியில்லை. இரண்டாவது வருடத்திற்கே கண்ணதாசனின் நண்பர்கள்தான் அவருக்கு கட்டணம் செலுத்தி இருந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவன்:
இச்செய்தியினை அறிந்து உடைந்து போன கண்ணதாசன் மனம் வெறுத்துப் போய் அங்கேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சவப்பெட்டியில் வந்து சேர்ந்த கண்ணதாசனைப் பார்த்து ஊரே கதறிய சம்பவம் கல் மனதையும் கரைப்பதாய் இருந்தது.
இன்று என்னுடைய நாள்:
தன்னுடைய டைரியில் "படிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை" என்று எழுதிய கண்ணதாசன் மற்றொருநாள் "இந்த நாள் என்னுடைய நாள்... நான் மருத்துவராவேன்" என்று எழுதியுள்ளார். ஆனாலும், நாட்கள் கரைந்து போனதுதான் மிச்சம்.
உதவிக்கு வரத் தயாரில்லை:
வீதிக்கு, வீதி கல்வி உதவி, இளைஞர்களின் எதிர்காலம் என்றெல்லாம் கோஷம் இடுபவர்கள்தான் இருக்கின்றார்களே தவிர நடைமுறையில் தகுதியானவர்களுக்கு உதவி செய்ய யாருமே தயாராய் இல்லை.
கல்விதான் முக்கிய சொத்து:
கல்வியை அளவிடாமல், சொத்துக்களை மட்டும் அளவிட்டு தருவதற்கு இதென்ன வீட்டுக் கடனா, இல்லை தொழிற்சாலை முதலாளிகளிக்கு கொட்டிக் கொடுக்கும் கடனா?
இந்திய கஜானா காலியாகாது:
ஒவ்வொரு ஏழை மாணவனின் கனவையும் நனவாக்க வேண்டிய ஒரு முயற்சிதான் இந்தக் கல்விக்கடன். கருப்புப்பணம் கல்லா, கல்லாவாய் வெளிநாடுகளில் கொட்டிக் கிடக்கும் நிலையில், ஒரு திறமையான மாணவனுக்கு கடன் அளிப்பதாலா இந்திய கஜானா காலியாகிவிடப்போகின்றது.
சவப்பெட்டிதானா எங்களுக்கு?:
மருத்துவராகி வரவேண்டிய கண்ணதாசன் சவப்பெட்டியில் வந்து சேர்ந்ததற்கு காரணம் இதுபோன்ற வன்மம் பிடித்த பணியாளர்களும், பணக்காரர்களுக்கு மட்டுமே படியளப்பவர்களும்தான் காரணம்.
வெட்டித்தனமான விதிமுறைகள்:
அற்புதமான தந்தை கிடைத்தும், அரசு வங்கியின் பழுது போன அதிகாரிகளால் இன்று தன் உயிரையே விட்டுள்ளார் கண்ணதாசன்.
இனியேனும் முதலில் இதுபோன்ற வெட்டித்தனமான விதிமுறைகளை வெட்டித்தள்ளினால் மட்டுமே கண்ணதாசனின் சாவிற்கும், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உண்மையான நியாயம் கிடைக்கும்!












Click it and Unblock the Notifications