மதிமுக மாணவர் அணியின் பேச்சுப் போட்டியில் பங்குபெறுங்கள்.. ரூ.7 லட்சத்தை அள்ளுங்கள்
சென்னை: மதிமுக மாணவர் அணி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 7 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கைகளாய் வளர்ந்து வரும் இளம் மாணவக் கண்மணிகளின் பேச்சாற்றல் திறனை வளர்க்கவும், கொள்கைப் பகைவர்கள் நிறைந்த அவையில் இனத்தின் உரிமைக்காக இருபத்தி ஐந்து ஆண்டுகள் அஞ்சாது போரிட்ட மதிமுக பொதுச் செயலாளற் வைகோவின் வாதத் திறனை உணர்ந்து உள்வாங்கி, உணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில், மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக "நாடாளுமன்றத்தில் வைகோ" என்ற தலைப்பில் மூன்று கட்டப் பேச்சுப் போட்டிகளை நடத்துகிறது.
முதல் கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மூன்று மாணவர்களுக்கு முறையே ரூ.5,000; ரூ.3,000; ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதில் வெற்றிபெற்ற மூவரும் 24.11.2013 ஞாயிறு அன்று நடைபெறும் மண்டலப் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். அதில் வெற்றி பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.6,000; ரூ.4,000; ரூ. 2,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
11 மண்டலங்களில் முதல் மூன்று இடம் பெறும் 33 மாணவர்களும் 22.12.2013 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பார்கள்.
மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 1 லட்சம்; ரூ. 50 ஆயிரம்; ரூ. 25,000 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மொத்தப் பரிசுத் தொகை ரூ. 7 லட்சம் ஆகும்.
மாநில பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுத் தொகையையும், மாவட்ட, மண்டல, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் 120 மாணவ-மாணவியருக்கு "நற்றமிழ் நாவரசு" விருதினையும், போட்டியில் பங்கேற்ற அனைத்துப் மாணவ பேச்சாளர்களுக்கும் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் 05.01.2014 அன்று காலை 10 மணிக்கு திருச்சி தேவர் அரங்கில் நடைபெறும் விழாவில் வைகோ வழங்குவார்.
முற்றிலும் அரசியல் சார்பற்ற 125 தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், சிறந்த பேச்சாளர்களை நடுவர்களாகக் கொண்டு இப்போட்டி நடைபெறுகிறது. 1500 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவ-மாணவியர் இந்தப் பேச்சுப்போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களின் வழிகாட்டுதலில், மண்டல மாணவர் அணிப் பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்கள் ஒத்துழைப்போடு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.
பேச்சுப்போட்டி குறித்த தகவல்கள், இதர விவரங்களை தலைமைக் கழகம் தாயகத்திலும், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் (அலைபேசி: 94433 70232; மின்னஞ்சல்: [email protected]) மற்றும் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்களையும் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என்று மதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications